ஞாயிறு, 29 மார்ச், 2020

சைவ மாத இதழ்கள் - 19 ம் நுாற்றாண்டின் இறுதி மற்றும் 20ம் நுாற்றாண்டின் தொடக்கம் - ஓர் அறிமுகம்



தமிழில் வெளியான, வெளியாகும் தினசரி, வார, இருவார, மாத மற்றும் பருவ இதழ்கள் பற்றி நிறைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலன, இலக்கிய இதழ்களைப் பற்றியும் அரசியல் இதழ்களைப் பற்றியும் மேற்கொள்ளப்பட்டவையே. அரிதிலும் அரிதாக, கலை, அறிவியல் உள்ளிட்ட இதழ்களைப் பற்றியும் ஆய்வுகள் நடந்துள்ளன.


ஆனால், சமயம் சார்ந்தும், சாதிகள் சார்ந்தும் வெளியான இதழ்கள் குறித்து விரிவான தளத்தில், பரந்து விரிந்த பார்வையில் இதுவரை ஆய்வுகள் நடந்ததாகத் தெரியவில்லை. சைவ சமயம் தொடர்பாக 19ம் நுாற்றாண்டு தொடங்கி இப்போது வரை வெளியாகும் மாத இதழ்களைப் பற்றி கடந்த ஓராண்டாக நான் ஆய்வு மேற்கொண்டு வந்தேன். ஆய்வில் 10 சதவீதமே கடந்துள்ள நிலையில், அதைப் பற்றி  சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் எழுந்ததுதான் இந்தக் கட்டுரை.

19ம் நுாற்றாண்டின் தொடக்கத்தில் அச்சு பதிப்புகள் மூலம் கருத்துக்களை வெளிப்படுத்தும் முறை பரவலான பின், இலங்கையின் யாழ்ப்பாணத்திலும் தமிழகத்திலும் பல சைவ மாத இதழ்கள் வெளியாகத் தொடங்கின.

இலங்கை இதழ்கள்

 எச்.எம். சின்னத்தம்பி என்பவரை ஆசிரியாகக் கொண்டு, 1877ல் வெளியான இலங்கை நேசன் தான் யாழின் முதல் சைவ இதழ். இலங்கை நேசனில் ஆறுமுக நாவலரும் எழுதியுள்ளார்.

1882ல் சரவண முத்துப்பிள்ளை ஆசிரியராக இருந்து தொடங்கிய சைவ உதயபானு, சைவப் பிரகாச சமாஜத்தால் கொழும்பில் இருந்து வார இதழாக வெளிவந்தது. The Sivite Rising Sun என்ற ஆங்கிலப் பெயரையும் கொண்டிருந்த சைவ உதயபானு, வண்ணார்பண்ணையில் இருந்து வெளியானது. 1884 வரை வெளியான இந்த இதழ், அதன் பின் எப்போது நிறுத்தப்பட்டது எனத் தெரியவில்லை.

 1888ல் யாழ்ப்பாணத்தில் சைவ பரிபாலன சைப தொடங்கிய போது, இந்து சாதனம் என்ற இதழை அச்சிடுவதற்காக சைவ உதயபானுவின் அச்சியந்திரங்கள் யாழுக்கு அனுப்பப்பட்டன. சைவ சமாஜம், சைவ உதயபானுவின் தொடர்ச்சியே சைவ பரிபாலன சபை மற்றும் இந்து சாதனம் என்கிறார், நுாலகம் நிறுவனர் கோபிநாத்.

1882ல் மூத்த தம்பிச் செட்டியாரை ஆசிரியராகக் கொண்டு வெளியான விஞ்ஞானவர்த்தனி, ஞானசபாபதிப் பிள்ளையை ஆசிரியராகக் கொண்டு வெளியான சைவாபிமானி போன்றவை முக்கிய சைவ இதழ்களாக விளங்கின.

1908ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் சி.  தாமோதரம் பிள்ளையால் (சி.வை.தாமோதரம் பிள்ளை அல்லர்) தொடங்கப்பட்டு மாதம் இருமுறையாக வெளிவந்தது தான் ஞானசித்தி இதழ். பின்னர் தமிழகத்தில் இருந்தும் இந்த இதழை வெளிக் கொண்டு வந்தார். தேவகோட்டை சிவாகம சித்தாந்த பரிபாலன சபையில், போதக ஆசிரியராக இருந்து, 1919ம் ஆண்டு, அக்டோபர் 31ம் தேதி மறைந்தார். இந்த ஞானசித்தியில் சைவ சமய உண்மைகள் பல அறுதியிட்டு ஆகமப் பிரமாணங்களுடன் வெளியாகின. இந்த தகவல்கள், பிற்காலத்தில் தமிழகத்தில் வெளியான பல சைவ இதழ்களில் தொடர்ந்து மறுபிரசுரம் செய்யப்பட்டன.

1889ம் ஆண்டு முதல் இந்து சாதனம் வெளியாகி வருகிறது. இடையில் சில ஆண்டுகள் நிறுத்தப்பட்டிருந்தது. 2017ம் ஆண்டு முதல் நீர்வை மயூரகிரி சர்மாவை ஆசிரியராகக் கொண்டு புதுப்பொலிவுடன் வெளிவருகிறது. இந்த இதழின் ஆங்கிலப் பதிப்பு Hindu Organ என்ற பெயரில் தனி இதழாகவும் சில காலம் வெளியானது. ஆரம்ப காலங்களில் நல்லுார் த.கைலாசப்பிள்ளை போன்றோர் இந்து சாதனத்தில் எழுதி வந்துள்ளனர்.

இவை தவிர, 20ம் நுாற்றாண்டின் தொடக்கத்தில், 1908ல் சைவ சூக்குமார்த்த போதினி, 1910 ல் சைவ பாலிய சம்போதினி, 1924ல் சைவ சித்தாந்த பானு ஆகிய இதழ்கள் தோன்றி சில ஆண்டுகளில் மறைந்துள்ளன.

தமிழகத்தில் சைவ இதழ்கள்

சித்தாந்த ரத்நாகரம்

சைவ சித்தாந்த  சண்ட மாருதம் சூளை சோமசுந்தர நாயகர் தொடங்கிய சித்தாந்த ரத்நாகரம் என்ற இதழ் தான் தமிழகத்தில் முதன் முதலாக அறியப்படும் சைவ இதழ். இது மாத, வார இதழ்களைப் போல் அல்லாமல், ஒரு பெரிய நுாலைப் பல பகுதிகளாகப் பிரித்து சஞ்சிகைகளாக அதாவது பாகம் பாகமாக வெளிவந்தது. அதில் தான் நாயகர் தனது பல நுால்களையும் தொடர் கட்டுரைகளாக எழுதி வெளியிட்டார். அவற்றுக்கான மறுப்பு எழுந்த நிலையில் அதற்கான பதில்களையும் அந்தந்த இதழ்களிலேயே பதிவு செய்தார். பின்னாட்களில் அவை தொகுக்கப்பட்டு நுால்களாக வெளிவந்தன.

நாயகர் மட்டுமின்றி அவரது சீடர்கள் எழுதிய நுால்களும், கட்டுரைகளும் சித்தாந்த ரத்நாகரம் இதழில் அவர்கள் பெயருடனோ அன்றி நாயகரின் பெயருடனோ வெளியாகின.

ஞானாமிர்தம்

யாழ்ப்பாணத்து வடகோவைச் சபாபதி நாவலர் அவர்கள், சென்னையில் தொண்டை மண்டல வேளாளப் பிரபுக்களின் உதவி மற்றும் ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியின் நிதியுதவியால், சென்னையில் சித்தாந்த வித்தியாநுபாலன அச்சியந்திர சாலை அமைத்து அங்கிருந்து சர்வதாரி வருஷம் வைகாசி மாதம் முதல் அதாவது 1888ம் ஆண்டு மே மாதம் முதல் ஞானாமிர்தம் என்ற மாத இதழை வெளியிட்டு வந்தார். போதிய நிதியுதவி கிடைக்காததால், 1889ம் ஆண்டு மார்ச் மாதத்தோடு ஞானாமிர்தம் நின்று விட்டது. இதழ் நிறுத்தப்பட்டதை அறிந்த சேதுபதி மன்னர், மீண்டும் முன்பணம் கொடுத்ததால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1891ம் ஆண்டு கர வருஷம் கார்த்திகை மாதம் முதல் சிதம்பரத்தில் இருந்து வெளியாகத் தொடங்கியது.



ஞானாமிர்தம் இதழ் வெளியாக, 1891ம் ஆண்டு கர வருஷத்திற்கு 360 ரூபாய் மற்றும் 1892ம் ஆண்டு  நந்தன வருஷத்திற்கு 300 ரூபாயை சேதுபதி மன்னர் நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்த நிதியுதவியை வைத்து மட்டுமே இரண்டு ஆண்டுகள் ஞானாமிர்தம் மாதாந்த இதழாக வெளிவந்துள்ளது. இந்த தகவலை 1892ம் ஆண்டு நந்தன வருஷம்  கார்த்திகை மாதம் வெளியான ஞானாமிர்தம் இதழில் நாவலர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஞானாமிர்தம் இதழில்,  சித்தாந்த சைவ போதம், திராவிடப் பிரகாசிகை, ஜகத்குரு விசாரம் என்ற தலைப்புகளில் தொடர் கட்டுரைகள் வெளியாகின. இவற்றில் திராவிடப் பிரகாசிகை பின்னாளில் தனி நுாலாக வெளியானது. இதுவே தமிழில் இலக்கிய வரலாறு எழுதுவதற்கான முன்னோடி நுால் என்பார் கார்த்திகேய சிவத்தம்பி.



வேறு எந்த மாத இதழ்களிலும் காணக் கிடைக்காத வகையில், ஞானாமிர்தம் இதழில்தான், இதழின் இலக்கணம், இதழாசிரியரின் இலக்கணம், இதழைப் படிப்போரின் இலக்கணம் என மூன்றையும் குறிப்பிட்டு தனித்தனி கட்டுரைகள் வரைந்தார் நாவலர். இன்று படிப்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும் அன்று இதழ்கள் வளர்ந்து கொண்டிருந்த நிலையில் இதுபோன்ற வரையறைகள் தேவையாக இருந்தன என்பதை யூகிக்க முடிகிறது.

ஞானபானு

ஞானபானு என்ற பெயரில் 19ம் நுாற்றாண்டிலும், 20ம் நுாற்றாண்டிலும் பல மாத இதழ்கள் வெளியாகியுள்ளன. பொதுவாக இதழியல் வரலாற்றில், ஞானபாநு என்று சொன்னால் அது விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா நடத்தி வந்த இதழையே  குறிக்கிறது. ஆனால், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த, சித்தாந்த போத ரத்னாகரம், வைதிக சைவ சித்தாந்த போத ரத்னாகரம் முதலிய பட்டங்களைப் பெற்ற காஞ்சி ஆலால சுந்தரம் பிள்ளை, ஞானபானு என்ற தலைப்பில் ஒரு மாத இதழை நடத்தி வந்தார்.



மற்ற சைவ இதழ்களில் இருந்து இந்த இதழ் முற்றிலும் மாறுபட்டதாக விளங்கி வந்தது. அநேகமாக இவர் தான், சைவ இதழியல் உலகில் முதன் முதலில் தலையங்கம் எழுதத் தொடங்கியவர் எனலாம்.

இவரது குரு, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஏகாம்பர சிவயோகிகள். இவர், சைவ சித்தாந்த சண்ட மாருதம் சூளை சோமசுந்தர நாயகருக்கு மாமன் முறை உள்ளவர். ஆலால சுந்தரம் பிள்ளையும் யோகிகளுக்கு உறவினர் தான். ஆரம்பத்தில் ஆதிசங்கரரின் அத்வைதத்தி்ன்பால் ஈர்ப்புக் கொண்டு, அச்சுதாநந்த சுவாமிகள் என்ற பெயரில் விளங்கிய யோகிகள், ஒரு கட்டத்தில் சைவ சித்தாந்தத்தின் பால் ஈர்க்கப்பட்டு தனது பெயரையும் ஏகாம்பர சிவயோகிகள் என மாற்றிக் கொண்டார்.

ஏகாம்பர சிவயோகிகள்

 ஆலாலசுந்தரம் பிள்ளை

அவரிடம் சைவ சித்தாந்தப் பாடம் பயின்ற பிள்ளை, அன்றும் இன்றும் வேறெந்த சைவ இதழ்களிலும் வெளிவராத அத்வைத சம்பிரதாய நுால்களான ஞானவாசிட்டம், பகவத் கீதா சாரம், சைவ, வைணவ தல வரலாறுகள், தமிழிலும் ஆங்கிலத்திலும் பழமொழிகள், தாயுமானவரின் பாடல்களுக்கு உரைகள், சூதசங்கிதைக்கு உரை, புராணங்கள், விரத நிர்ணயங்கள் என பல பரிமாணங்களில் சைவ உண்மைகளை எடுத்துரைத்து வந்தார்.
இவற்றில் அத்வைத சம்பிரதாய நுால்களின் உரைகளின் இறுதியில், சைவ சித்தாந்தத் தெளிவு என்ற தனித் தலைப்பில் அந்த நுால்களுக்கு சைவ சித்தாந்த ரீதியில் விளக்க உரை எழுதியிருப்பார். 4ம் இதழிலில், தான் ஏன், அத்வைத சம்பிரதாய நுால்களுக்கு உரை எழுதினேன் என தலையங்கத்தில் விளக்கியிருப்பார்.

சிவஞான போதத்திற்கு மாதவச் சிவஞான சுவாமிகள் எழுதிய மாபாடியம் அச்சாவதற்கு முன்பே, ஏகாம்பர சிவயோகிகளிடம் கேட்டறிந்தபடி, சிவஞானபோத நுட்பம் என்ற தலைப்பில் சிவஞானபோதத்திற்கு விளக்க உரை எழுதி அதை ஞானபானுவில் முதல் கட்டுரையாக இடம்பெறச் செய்தார் பிள்ளை.

ஆங்கில அரசை வாழ்த்தியும், கோயில்களில் தர்மகர்த்தாக்கள் செயல்பட வேண்டிய முறை, தாயுமானவ சுவாமிகளின் பாடல்களுக்கு உரை எழுதிய அத்வைதிகள், திருவாசகத்திற்கும் உரை எழுத முற்பட்டதைக் கண்டித்தது, கடல் பிரயாணம் மேற்கொண்ட பிராமணர்களை சடங்குகள் மூலம் சுத்திகரித்து மீண்டும் தங்கள் சமுதாயத்திலேயே பிராமணர்கள் சேர்த்துக் கொண்டது என பல தலைப்புகளில் விரிவான தலையங்கங்களை எழுதியுள்ளார் காஞ்சி ஆலால சுந்தரம் பிள்ளை. துரதிர்ஷ்டவசமாக ஞானபானு இதழின் முழு வெளியீடுகளும் தற்போது கிடைப்பதில்லை, அங்கொன்றும் இங்கொன்றுமாக தனிநபர் சேகரிப்பில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 

சித்தாந்த தீபிகை

தமிழிலும் ஆங்கிலத்திலும் சைவ சித்தாந்த உண்மைகளை வெளிக் கொணர வேண்டும் என்ற ஆசையால், ஜே.எம்.நல்லசாமி பிள்ளையால், 1897ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தமிழில் ஓராண்டு மட்டுமே வெளிவந்த இந்த இதழ், பின்னர் 1911ம் ஆண்டு வரை ஆங்கிலத்தில் முழுமையாக வெளிவந்தது.



இதில் சித்தாந்த சாத்திரங்கள் குறித்த ஆய்வில் ஆழங்கால்பட்ட கட்டுரைகள் வெளியாகின. இன்று வரை இப்படி ஒரு இதழ் மீண்டும் வரவே இல்லை எனலாம்.

ஞானசாகரம்

சென்னையில் சைவ சித்தாந்த சண்ட மாருதம் சூளை சோமசுந்தர நாயகர் நிறுவிய வேதாகமோக்த சைவ சித்தாந்த சபையின் சார்பில், 1902ம் ஆண்டு முதல், வெளியானதுதான் ஞானசாகரம். நாகை வேதாசலம் பிள்ளை என்ற இயற்பெயரில் மறைமலையடிகள் தொடங்கிய மாத இதழ் இதுதான், பின்னாளில் அவர் தமிழ்நெறியை ஏற்றவுடன், இதழின் பெயரும் அறிவுக் கடல் என மாற்றம் பெற்றது. இந்த இதழ் ஆரம்ப நாட்களில் சென்னை பண்டித மித்திர யந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது.






இந்த இதழில் மாகறல் கார்த்திகேய முதலியார், டி.சவரிராய பிள்ளை, யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் அ.குமாரசுவாமிப் பிள்ளை, மதுரை சுப்பிரமணிய பிள்ளை உள்ளிட்ட சைவப் பேரறிஞர்கள் தொடர் கட்டுரைகளை எழுதி வந்தனர்.

மாணிக்கவாசகர் கால நிர்ணயம் உள்ளிட்ட தனது நுால்களை, ஞானசாகரம் இதழில் தான் மறைமலையடிகள்  தொடர் கட்டுரைகளாக எழுதி பின்னர் நுால்களாக வெளியிட்டார். இதில்தான், திருவாசகத்தின் முதல் நான்கு அகவல்களுக்கும் உரை எழுதினார்.

சித்தாந்தம்

சித்தாந்த தீபிகையின் தொடர்ச்சியாக, சென்னையில் இயங்கி வரும் சைவ சித்தாந்த சமாஜத்தின் சார்பில் 1912ம் ஆண்டில் பூவை கல்யாண சுந்தர முதலியாரை ஆசிரியராகக் கொண்டு சித்தாந்தம் மாத இதழ் வெளிவரத் தொடங்கியது. ம.பாலசுப்பிரமணிய முதலியார், திருச்சிற்றம்பலம் பேரறிஞர் மு.அருணாசலம், ந.ரா.முருகவேள், சச்சிதானந்தம் என சைவப் பேரறிஞர்கள் பலர் இந்த மாத இதழில் ஆசிரியர்களாக இருந்துள்ளனர்.

ஓலைச் சுவடிகளில் இருந்து பல சைவ நுால்கள் சித்தாந்தம் இதழில் அச்சுருவுக்கு கொண்டு வரப்பட்டன. பொருள் பொதிந்த கட்டுரைகள் மட்டுமின்றி சர்ச்சைக்குரிய கட்டுரைகளும் இதில் இடம் பெற்றன.

சித்தாந்தம் இதழில் தான், துடிசைக் கிழார் அ.சிதம்பரனார் முதன் முதலாக, சிவஞானபோதம் தமிழ் முதல் நுாலே என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகளை எழுதி, மெய்கண்டார் அருளிச் செய்த சிவஞானபோதம் தமிழா? வடமொழி மொழிபெயர்ப்பா? என்ற விவாதத்தை தொடங்கி வைத்தார். பின்னாட்களில் ம.பா. அதை 120 கேள்விகளுடன் தனி நுாலாக்கி விவாதத்தை நாடளவில் பேசுபொருளாக்கினார். அவர் எழுப்பிய கேள்விகளுக்கு சங்கரன் கோவில் சைவ சித்தாந்த சபை நிறுவனரும், திருவாவடுதுறை ஆதீன வித்துவானுமான பேட்டை ஆ .ஈசுரமூர்த்திப் பிள்ளை முழுமையான பதில்களை அளித்தார்.

சித்தாந்தம் இதழில் ஆரம்பத்தில், தமிழ், வடமொழி தொடர்பான ஆக்கப்பூர்வமான விவாதங்கள் பெரிய அளவில் நடந்தன. கட்டுரைகளுக்குப் பதில் அளிக்கும் விதத்தில்  விரிவான ஆய்வுகளும் இடம்பெற்றன. 1980களில் சைவ சித்தாந்த சமாஜம், பெருமன்றமாகப் பெயர் மாற்றம் பெற்ற பின்னர், சித்தாந்தம் இதழின் தடமும் முற்றிலும் மாறியது.

தற்போது, நல்லுார் சரவணன் தலைமையில் இயங்கி வரும் பெருமன்றத்தின் சார்பில் அவரையே ஆசிரியராகக் கொண்டு சித்தாந்தம் இதழ் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நுாற்றாண்டைக் கடந்த முதல் சைவ இதழ் என்ற பெருமை சித்தாந்தம் இதழுக்கே உரியது.

சைவம்

சைவ இதழியல் உலகில் மிக நீண்ட காலம் வெளிவந்த இதழ்களில் சைவமும் ஒன்று. சென்னை சிவனடியார் திருக்கூட்டத்தின் சார்பில், வெளியானது தான் சைவம் மாத இதழ். இருக்கம் ஆதிமூல முதலியாரை ஆசிரியராகக் கொண்டு இந்த இதழ், 15 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று சைவ இதழியல் உலகில் தனி இடம் பிடித்தது.



தமிழகத்தில் அடியார்கள் முதன் முதலில் ஒரு கூட்டமைப்பாக இணைந்து செயல்பட்ட பெருமைக்குரியது சென்னை சிவனடியார் திருக்கூட்டம். இதன் சார்பில் பள்ளிக்கூடம், தேவாரப் பாடசாலை, மாத இதழ் ஆகியவை  தொடங்கப் பெற்று தடையின்றி நடந்து வந்தன.

மற்ற அமைப்புகளில் இருந்து மிக வித்தியாசமாக, திருக்கூட்டத்தின் வருடாந்தர வரவு, செலவுகள் அறிக்கை,. சைவம் இதழில் வெளியிடப்பட்டு வந்தது. இதன் மூலம் வெளிப்படைத் தன்மையைப் பேணி வந்தார் ஆதிமூல முதலியார்.

முதலியார் மட்டுமின்றி சைவப் பேரறிஞர்கள் பலர் சைவம் இதழில் தொடர் கட்டுரைகள் எழுதி வந்தனர். முதன் முதலாக விளம்பரங்கள் வெளிவந்த சைவ இதழும் இதுதான்.

சமகால பிரச்னைகளான மதமாற்றம், சுகாதாரம், மகப்பேறு, மருத்துவம் ஆகியவை தொடர்பாகவும் சைவம் இதழில் கட்டுரைகள் வெளியாகின. வெறும் இதழ் நடத்துவதோடு மட்டுமின்றி, சமூகத்திற்குப் பயனுள்ள பல நடவடிக்கைகளையும் சென்னை சிவனடியார் திருக்கூட்டம் மேற்கொண்டு வந்தது.

சைவம் இதழில் பெரும்பாலும், இந்து சாதனம், ஞானசித்தி உள்ளிட்ட இதழ்களில் இருந்தும், சூளை சோமசுந்தர நாயகர், பாம்பன் சுவாமிகள் போன்ற சீலர்கள் எழுதியதுமான கட்டுரைகள் அச்சிடப்பட்டு வந்தன. தனிநபர்கள் சைவம் இதழில் கட்டுரைகள் எழுதியது ஆரம்ப காலத்தில் குறைவாகவே இருந்தது.

சிவஞானபோத மாபாடியம் முதலில் அச்சான பின், சைவம் இதழின் ஆசிரியராக இருந்த ஆதிமூல முதலியார், சிவஞானபோதத்திற்குப் பொருள் எழுதி தொடர் கட்டுரைகளாக வெளியிட்டார். இன்று வரை அது நுாலாகவில்லை என்பது வருந்தத் தக்கது.

பின்னாட்களில், மதுராந்தகத்தில் குருகுலம் தொடங்கிய மறைமலையடிகளாரின் சீடர் அழகரடிகள், இதே சைவம் இதழுக்கு ஆசிரியராக இருந்து வெளியிட்டு வந்தார்.

சைவம் பற்றியும் சென்னை சிவனடியார் திருக்கூட்டம் பற்றியும் விரிவான ஆய்வு தேவை.

செந்தமிழ்ச் செல்வி

சைவ சித்தாந்த நுாற்பதிப்புக் கழகத்தின் அதிகாரபூர்வ மாத இதழ் இது. 1925ம் ஆண்டு தொடங்கி இன்று வரை நடந்து வருகிறது. கா.சுப்பிரமணிய பிள்ளை, மறைமலையடிகள் உள்ளிட்ட சைவப் பேரறிஞர்கள் பங்கு பற்றிய இந்த இதழ், சைவத்தின் வளர்ச்சிக்காக தொடங்கி, தனித்தமிழ் முழக்கத்தை முன்வைத்து திசை மாறி, தற்போது பல்சுவை இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இதன் தோற்றம், வளர்ச்சி, தேய்வு பற்றி தனி ஆய்வே தேவை.

சிவநேசன்

நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் குடியிருப்புகளில் ஒன்றான பலவான் குடியில் இருந்து 1925ம் ஆண்டு முதல் 15 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிவந்ததுதான் சிவநேசன். இராம.கு.இராம. ராமசாமிச் செட்டியார் இதன் ஆசிரியராக இருந்தார். மற்ற சைவ மாத இதழ்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டு, சமகால பிரச்னைகளை அதிகளவில் பேசுபொருளாக எடுத்துக் கொண்டு செயல்பட்ட ஒரே சைவ இதழ் இதுதான்.



குறிப்பாக, ஈ.வெ.ரா.வின் சுயமரியாதை இயக்கத்திற்கு எதிரான கட்டுரைகளை சிவநேசன் தொடர்ந்து வெளியிட்டு வந்தது. அதேபோல் சைவ சமயத்தில், பசுத்தோல் போர்த்திய புலிகளாக நடமாடியவர்கள் பற்றியும் அது தோலுரித்து தொங்க விட்டது. சிவநேசனுக்கு மாநிலம் தழுவிய அளவில் பெரும் வரவேற்பு கிடைத்திருந்தது.

இந்தித் திணிப்பை எதிர்த்து பல கட்டுரைகளை வெளியிட்ட சிவநேசன், 1933ம் ஆண்டு கோயில் நுழைவுப் போராட்டத்தை எதிர்த்து கடுமையாக சாடியது. அந்த ஆண்டு முழுவதும் மரபுச் சைவர்கள், கோயில் நுழைவுப் போராட்டம் குறித்து விமர்சித்து எழுதிய கட்டுரைகள் சிவநேசனில் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருந்தன. 1933ல் திருநெல்வேலியில் நடந்த  சனாதன இந்து தர்ம மாநாடு குறித்த விரிவான செய்திகள் சிவநேசனில் இடம் பெற்றிருந்தன.

புகழ் பெற்ற சைவப் பேரறிஞர்கள் சிவநேசனில் எழுதுவதைப் பெருமையாகக் கருதும் அளவுக்கு சிவநேசனுக்கு வரவேற்பு இருந்தது. நினைத்த கருத்தை துணிச்சலுடன் எழுதி வெளியிட்டு வந்ததால் ராமசாமிச் செட்டியாரின் பெயரும் பரவியது. பேட்டை ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை சிவநேசனில் , ஆசிரியர் பெயர் குறிப்பிடாமல், சுலோக பஞ்சக விஷயம் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைகள் பின்னாளில் தனி நுாலாக வெளியானது. அதையும் ராமசாமிச் செட்டியாரே வெளியிட்டார். கோயில் நுழைவுப் போராட்டத்தை எதிர்த்து பிரசாரம் மேற்கொண்ட நீலகண்ட சித்தாந்தியார், சுலோக பஞ்சக விஷயத்தைப் பாராட்டி எழுதியிருந்தார்.

இந்த அனைத்து சைவ மாத இதழ்களும், நுால் மதிப்புரைகள், மாதம்தோறும் நடைபெற்ற நிகழ்வுகள், கண்டனங்கள், அறிவிப்புகள் போன்றவற்றை பொதுவாக வெளியிட்டு வந்தன. மிக அரிதினும் அரிதாகவே இவற்றில் விளம்பரங்கள் வெளிவந்தன. வருவாய் நோக்கம் கருதி இவற்றின் ஆசிரியர்கள் இந்த மாத இதழ்களை நடத்தவில்லை என்பது தெளிவு.

பிற இதழ்கள்


  1. இவை தவிர, நெல்லையில் செயல்பட்டு வந்த வைதிக சைவ சம்மேளனம் என்ற அமைப்பின் சார்பி்ல், வி.சிதம்பர ராமலிங்கம் பிள்ளையை ஆசிரியராகக் கொண்டு சமயஞானம் என்ற மாத இதழ் வெளியானது.
  2. 1901ம் ஆண்டில் இந்துக் கல்லுாரியில் தலைமைத் தமிழ்ப் பண்டிதராக பணிபுரிந்த தி.பா.சிவராம பிள்ளை, திருநாவுக்கரசு என்ற பெயரில், மாத இதழ் நடத்தி வந்தார். நெல்லையின் சைவ அறிஞர்களான செப்பறை சுவாமிகள், காருடை சூரியமூர்த்திப் பிள்ளை போன்றோர் அதில் பங்களிப்பு செய்தனர். அருட்பா - மருட்பா வழக்கிற்காக நா.கதிரைவேற் பிள்ளைக்கு நிதியுதவி திரட்டிக் கொடுத்தது பற்றிய செய்திகள் இந்த இதழி்ல் தான் காணப்படுகின்றன. 
  3. கொங்கு நாட்டின் பேரூரில் இருந்து ம.நா.ராமசாமி சிவாசாரியாரை ஆசிரியராகக் கொண்டு வெளியான சைவப் பிரகாசம்
  4. வடமொழியில் உள்ள சைவ நுால்களை தமிழாக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே கயப்பாக்கம் சதாசிவ செட்டியாரை ஆசிரியராகக் கொண்டு வெளியான சைவ வித்யா
  5. நெல்லை பேட்டையில் இருந்து, தங்கவேலுப் பிள்ளை என்பவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ஞான அரசு
  6. புதுவையில் இருந்து யாழ்ப்பாணம் ச.கந்தையா பிள்ளையை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த வித்தகம்
  7. சித்தாந்த பண்டித பூஷணம் பேட்டை ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை ஆசிரியராக இருந்து வெளியிட்ட சமயசாதனம் என பல சைவ இதழ்கள், சொல்லரிய தொண்டாற்றியிருக்கின்றன. 







இந்தக் கட்டுரையில், திருமடங்களின் சார்பில் வெளிவரும் இதழ்களை நான் சேர்க்கவில்லை. மாறாக, தனிநபர்கள், தனி அமைப்புகள் சார்பில் வெளியான இதழ்களையே  அறிமுகம் செய்துள்ளேன்.

இந்த இதழ்களில் பல தற்போது கிடைப்பதற்கே அரிதாகி விட்ட நிலையில், இவற்றின் சில பதிப்புகளை, தமிழ் இணைய மின்னுாலகத்தில், மின்னாக்கமாக காணமுடிகிறது. அந்த வகையில் தமிழக அரசுக்கு நாம் நன்றி சொல்லித் தான் ஆக வேண்டும்.

இக்கட்டுரை எழுதுவதற்கு, உ.வே.சா. நுாலகம் தான் எனக்குப் பெருமளவில் உதவியது. அந்த நுாலக நிர்வாகிகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல், ஞானபானு இதழ்களை ஆய்வுக்கு கொடுத்து உதவிய வேலுார் பாலவேல் ஐயா, ஞானாமிர்தம் இதழ்களைக் கொடுத்து உதவிய பாளையங்கோட்டை சைவ சபை நிர்வாகத்தினர் ஆகியோருக்கும் நான் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

(இந்தக் கட்டுரை, வலம் 2020 மார்ச் மாத இதழுக்காக எழுதியது. இணைப்பு:  http://www.valamonline.in/2020/03/saiva-magazines-19th-Century-and-20th-Century.html?m=1)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate