நமது முன்னோர் தமது முன்னோர் கூறியவற்றைச் சரியென்றே கொள்ளும் சுபாவத்தைக் கொண்டிருந்தா ரென்பதும், தமது முன்னோர் கூறியவை சரியானவையா பிசகானவையா என்று விசாரிக்கும் சுபாவத்தைக் கொண்டிருக்கவில்லை யென்பதும் நம்மில் ஒரு சிலர் அறிந்தவையே.
நமது முன்னோர் கூறியுள்ளவற்றில் ஒன்று சரியானதா பிசகானதா என்று நம்மில் ஒருவர் விசாரிக்கப் புகின், அவரைப் புரட்சிக்காரரென்றும் ஆன்றோரை நிந்திப்பவரென்றும், ஆன்றோரினும் அறிவுடையவ ரென்ற பெயரைக் கொள்ளக் கருதுபவரென்றும் பலவாறாக நிந்திக்கின்றனர் நம்மிற் பலர்.