சனி, 30 மார்ச், 2019

தன்னம்பிக்கை ஊட்டும் இந்து ஆன்மீக கண்காட்சி!


2010ம் ஆண்டு என நினைக்கிறேன். அப்போது திருவான்மியூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லுாரி மைதானத்தில் இந்து ஆன்மீகக் கண்காட்சி நடப்பதாக பெரிய பெரிய விளம்பரத் தட்டிகள் வைத்திருந்தனர். சரி என்னதான் இருக்கிறது என்று,நண்பர்களுடன் சென்று பார்த்தேன்.


கண்காட்சிக்குள் நுழைந்த உடன், திருஞானசம்பந்தர் அருளிச் செய்த திருவெழுகூற்றிருக்கையை ஒரு தேர் போலச் செய்து அதை அங்கு நிறுத்தியிருந்தனர். காந்தளகம் சச்சிதானந்தத்தின் ஏற்பாடு அது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்படி எல்லாம் செய்யலாமா என்று.

தொடர்ந்து கண்காட்சிக்குள் நுழைந்து ஒரு சுற்று சுற்றி வந்தேன். திருமடங்களின் சார்பில் சில அரங்குகள், ஜாதியமைப்புகளின் சார்பில் சில அரங்குகள்  என ஒரு கலவையாக அந்தக் கண்காட்சி காட்சி அளித்தது. அந்தக் கண்காட்சியில் இருந்து பெறுவதற்கு எனக்கு ஒன்றுமில்லை எனத் தோன்றியது. ஆனால் அந்த முயற்சி எனக்குப் பிடித்திருந்தது.

அடுத்து 2014ம் ஆண்டு என நினைக்கிறேன்… அந்தக் கண்காட்சியைத் தொடங்கி வைக்க  தயானந்த சரஸ்வதி சுவாமிகள் வந்திருந்தார். அதே நிகழ்ச்சியில் நித்யானந்தாவும் படோடோபமாக பங்கேற்றிருந்தார். மேடையில் அவரது இருப்பே வித்தியாசமாக இருந்தது.

அந்தக் கண்காட்சியிலும் வழக்கம்போல அரங்குகள், வித்தியாசமான முயற்சியாக, சில கட்அவுட்டுகள் மூலம் குறிப்பிட்ட கருத்துக்களை விளக்க முற்பட்டிருந்தனர். சைவ மடங்கள், வைணவ மடங்களின் அரங்குகள் உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

அதையடுத்து நடந்த கண்காட்சிகளுக்கு என்னால் செல்ல முடியவில்லை. இந்த முறை, என் 3 வயது மகளை அங்கு அழைத்துச் சென்று காட்ட வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன். அவளையும் அழைத்துக் கொண்டு குருானக் கல்லுாரிக்கு சென்றேன்.

இந்தமுறை எல்லா  ஏற்பாடுகளும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தன எனலாம். முகப்பில் யானை நின்று அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தது. அருகிலேயே பாரதமாதா கோயில்…கோசாலை அமைப்பு. கண்காட்சிக்கு வந்த கூட்டத்தில் கணிசமான நபர்கள் இங்குதான் நின்று கொண்டிருந்தனர்.

கண்காட்சியின் உள்ளே நுழைந்தால் நேரெதிரே அறுபத்து மூன்று நாயன்மார்களின் திருமேனிகள் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. அங்கு சிவனடியார்கள் அமர்ந்து திருவாசகம் பாடிக் கொண்டிருந்தனர். இடது கைப்பக்கம்,  ஆதிசங்கரர், ராமானுஜர் முதல்  குருநானக் வரையிலான மகான்களின் படங்கள் வைக்கப்பட்டு அவற்றின் கீழே விளக்கங்கள் எழுதப்பட்டிருந்தன. என் மகளுக்கு அவர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லி திருவுருவத்தைக் காட்டினேன்.

வழக்கம் போல் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தாலும், இந்த முறை அகர வரிசையில் அதாவது, ஆதீனம் என்றால்  ஆங்கில எழுத்து ஏ என்பதின் கீழ் வரும்… ஜாதி என்றால் கம்யூனிட்டி என்ற ஆங்கிலச் சொல்லின் முதல் எழுத்தான சி யில் வரும். இந்த முறையின் படி அரங்குகள் ஒதுக்கப்பட்டு சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தன.

சின்மயா மிஷன், ராமகிருஷ்ண மிஷன், வேலுார் நாராயணி அம்மா பீடம், ஈஷா யோக மையம் ஆகிய அமைப்புகள் தங்கள் அரங்குகளை விரிவான பரப்பளவில் அமைத்து, மக்களை ஈர்த்துக் கொண்டிருந்தார்கள்.

பசுப் பாதுகாப்பு தொடர்பாக இயங்கும் பல்வேறு அமைப்புகள், பழங்குடியினங்கள் மத்தியில் சேவை புரியும் அமைப்புகள், திருக்கோயில்களில் உழவாரப் பணி புரியும் அமைப்புகள், நுால் வெளியீடு, சடங்குகள் மூலம் சமயத்தைப் பரப்பும் பணிகளை மேற்கொள்ளும் அமைப்புகள்,  ஆர்எஸ்எஸ்சின் பல்வேறு கிளை அமைப்புகள் என விதம் விதமான அமைப்புகள் தங்கள் அரங்குகளை அமைத்திருந்தன.

இவை தவிர, பழமையும் பெருமையும் வாய்ந்த திருவாவடுதுறை , தருமபுரம், பேரூர், துழாவூர், வேளாக்குறிச்சி போன்ற சைவ ஆதீனங்களின் அரங்குகளும் இடம் பெற்றிருந்தன.

வலம் இதழின் சார்பிலும் தனியாக ஓர் அரங்கு அமைக்கப்பட்டிருந்தது, வித்தியாசமாகத் தெரிந்தது.

இவை  தவிர, சைவப் பிள்ளைமார், கார்காத்தார், யாதவர், கம்மநாயுடு, தேவர், நாடார், நாட்டுக்கோட்டை நகரத்தார் என பல்வேறு ஜாதிச் சங்கங்கள் சார்பாகவும் அரங்குகள் இருந்தன.

கூடுதல் சிறப்பாக ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தை சிறப்பான முறையில் ஒளிஒலி முறையில் ஓர் அரங்காக ஏற்பாடு செய்திருந்தது அனைவரையும் கவர்ந்தது. கண்காட்சியில் அதிகளவிலான கூட்டம் அங்கு தான் இருந்தது.

அதற்கடுத்தாற்போல், திருக்கயிலாய இசை வாத்தியக் குழு அரங்கில் கூட்டம் குவிந்தது. அங்கு செல்வோர் தங்களால் இயன்ற வாத்தியங்களை இசைத்துப் பயிற்சி எடுத்து மகிழ்ந்தனர்.

இந்த முறை கண்காட்சியைச் சுற்றிப் பார்ப்பதற்கு ஒரு நாள் போதவில்லை. 400க்கும் அதிகமான அரங்குகள் என்றார்கள். கால் வலி வந்து விட்டது.

கண்காட்சிக்கு வந்து சென்ற ஒவ்வொருவரும் தான் இந்து தான் என்பதை உணரும் அளவுக்கு இந்தக் கண்காட்சியின் ஒவ்வொரு அம்சமும் இடம் பெற்றிருந்தன.

குறிப்பாக குழந்தைகள், மாணவ, மாணவியர், அவர்தம் பெற்றோர் ஆகியோருக்கு இந்தக் கண்காட்சியில் கற்றுக் கொள்வதற்கு அவ்வளவு விஷயங்கள் காத்திருந்தன. என் மகள், ஈஷா யோகி சிலையைப் பார்த்தபடி அங்கிருந்த நகர மாட்டேன் என நின்று கொண்டாள். அவர் யார் எனக் கேட்டாள். அவர் தான் சிவபெருமான், கபாலி என்றேன். அதேபோல், லட்சுமி நரசிம்மர் அருகே நின்று கொண்டு புகைப்படம் எடுக்கச் சொன்னாள். அவளுக்கு தெய்வத் திருவுருவங்களை விளக்கிச் சொல்லவும், வித்தியாசம் காட்டவும், இந்தக் கண்காட்சி நன்றாகவே பயன்பட்டது.

ஒருபக்கம், இயற்கையோடு இசைந்து வாழும் வாழ்க்கையை உணர்த்தும் விதத்தில் சில அரங்குகள், மற்றொரு பக்கம், நவீன அறிவியலைப் பயன்படுத்தி கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் சாதிக்கும் அமைப்புகளின் அரங்குகள் என பழமைக்கும் பழமையாய், புதுமைக்கும் புதுமையாய் கண்காட்சி காட்சியளித்தது.

பக்திப்பூர்வமாக, உணர்வு பூர்வமாக உள்ள இந்துக்களுக்கு இந்தக் கண்காட்சி ஒரு உந்து சக்தி என்றே சொல்லலாம். தனது மதம் இவ்வளவு பெரிதா, இத்தனை தெய்வங்கள், இத்தனை அமைப்புகள், இத்தனை சேவைகள் உள்ளனவா என்பதை அறியும் அல்லது உணரும் ஒவ்வொரு இந்துவும் இந்தக் கண்காட்சியை இனித் தவற விடமாட்டார்.

நம்பிக்கைகளின் மேல் நம்பிக்கைகளாக கட்டி எழுப்பப்பட்ட கடவுள் உணர்வு பலப்பட இந்தக் கண்காட்சி பெருமளவில் உதவும் என்பதில் ஐயமே இல்லை.

அதேநேரம், அடிப்படைப் பாடங்களைக் கற்றுக் கொண்ட இந்து, அடுத்த கட்டத்திற்கு முன்னேற இந்தக் கண்காட்சி எந்த அளவில் உதவும் என்ற கேள்வியும் எனக்குள் எழுந்தது.

சாஸ்திரங்களின் அடிப்படையில் தனக்குத் தோன்றிய விதத்தில் வழிபாடுகளைக் கட்டமைத்துக் கொள்ள இன்றைய இந்து மதம் அனுமதிக்கிறது. அதனால் பல்வேறு வழிபாட்டுப் பிரிவுகள், பல்வேறு யோக சாதனைப் பிரிவுகள் என புற்றீசலாக முளைத்து வருகின்றன.

இந்தச் சூழலில், ஆரம்பக் கட்டத்தில் இருந்து அடுத்தகட்டத்திற்கு அதாவது, தத்துவார்த்த ரீதியாக செல்ல விரும்பும்  இந்துவிற்கு இந்தக் கண்காட்சி எப்போது வழிகாட்டும்?

எனக்குத் தெரிந்து இந்தக் கண்காட்சியில், தேனி ஓங்காரானந்தாவின் அரங்கில் மட்டும், ஆன்லைனில் அத்வைத சம்பிரதாயத்தை சொல்லித் தருவதாக அறிவிப்பு பெரிய விளம்பரப் பலகையாக வைக்கப்பட்டிருந்தது. அதில் என்னென்ன நுால்கள் சொல்லிக் கொடுக்கப்படும் என்ற பட்டியலும் கொடுக்கப்பட்டிருந்தது. அதை விட்டால் ஆதீன அரங்குகளில் சத்தமில்லாமல் வைக்கப்பட்டிருந்த சில நுால்கள். இவை தவிர தத்துவத் தேடலுக்கு இந்தக் கண்காட்சியில் எந்தவித இடமும் வழங்கப்படவில்லை.

எத்தனையோ ஜாதிகள்  இருந்தும் அவை முறையான ஒன்றிணைப்புடன் செயல்படவில்லை அல்லது செயல்படத் தயாராக இல்லை என்பதை இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றிருந்த  சில ஜாதிச் சங்கங்களின் அரங்குகள் எடுத்துக் காட்டின. தங்களைத் தேடி வருவோருக்கு தங்கள் வரலாற்றை எடுத்துச் சொல்லி, தாங்கள் செய்யும் சேவைகளையும் எடுத்துக் காட்டும்படியான எந்தவித முன்முயற்சியையும் அந்த ஜாதிகள் மேற்கொள்ளவில்லை. அடுத்த முறையாவது இந்தக் கண்காட்சிக்காகவாவது, ஜாதிச் சங்கங்கள் கொஞ்சம் செயல்பட்டு அவற்றை ஆவணப்படுத்தி, காட்சிப்படுத்துவார்கள்  என நம்புகிறேன்

நாட்டுக்கோட்டை நகரத்தார் மற்றும் கம்மநாயுடு அரங்குகளில் மட்டும் அவர்களது வரலாறு, சேவைகள் பற்றிய ஆவணங்கள் இருந்தன. அடுத்த முறை, பட்டியலினத்தைச் சேர்ந்த ஜாதிச் சங்கங்களும் இடம் பெறும் என நம்புகிறேன்.

இந்து அமைப்புகளின் அனைத்தும் சேர்ந்து எத்தனை சேவைகளை வழங்குகின்றன என்ற பட்டியலை பெரிய காட்சிப் பலகையாக வைத்திருந்தனர். அதைப் பார்த்தால் இவ்வளவு அமைப்புகள் இருக்கின்றனவா என மயக்கமே வந்து விடுகிறது.

ஆண்டுக்கு ஆண்டு, இந்து ஆன்மீக கண்காட்சி மெருகேறிக் கொண்டே செல்கிறது; கட்டமைப்பில் விரிவடைந்து கொண்டே வருகிறது. அனைத்து அமைப்புகளும் கண்காட்சியில் இடம் பெற ஆர்வம் காட்டுகின்றன.

இந்த நிலையில் எனக்கு எழுந்த சில சந்தேகங்களை இங்கு முன்வைக்கின்றேன்….

1.    சங்கரர், ராமானுஜர் போன்றோரின் படங்களை வைத்தவர்கள், காரைக்காலம்மையாருக்கும் அன்னபூரணிக்கும் வித்தியாசம் தெரியாமல் வைக்கலாமா? அதை கவனிக்கத் தவறியது ஏன்?

2.    தமிழகத்தின் ஆன்மீக எழுச்சியில் சைவ சமயக் குரவர் நால்வருக்கும், தத்துவார்த்த எழுச்சியில் மெய்கண்டாருக்கும் தனித்த இடம் உண்டு. மகான்களின் பட்டியலில் இவர்கள் விடுபட்டது  எப்படி?

3.    ஆன்மீக கண்காட்சி என்றாலே, தெய்வத் திருவுருவங்களை வைத்து வழிபாடு செய்யத்தான் வேண்டுமா? அவற்றுக்கு என்று தனித்த வழிபாடுகள், இடம், பொருள் என சாஸ்திரங்கள் சுட்டிக் காட்டியிருக்க, பல்லோர் முன்பு, அனைத்து  விதிகளையும்  மீறி, திருவுருவங்களை எழுந்தருளச் செய்யத்தான் வேண்டுமா?

4.    அன்னதானம் குறைந்து புட்கோர்ட் அதிகரித்துக் கொண்டே செல்வது நல்ல அறிகுறியாகத் தெரியவில்லையே?

5.    பொருளாதார ரீதியில் நலிவுற்றிருக்கும் இந்துக்களை மேம்படுத்த கல்வி, தொழில் போன்ற துறைகளில் வழிகாட்டும் கடனுதவி அளிக்கும் அமைப்புகளை அடுத்த முறை சேர்த்துக் கொள்ள வாய்ப்புள்ளதா?



எப்படிப் பார்த்தாலும் இந்து ஆன்மீக கண்காட்சி வெற்றி பெற்று விட்டது என்றே சொல்ல வேண்டும். நான் ஒரு இந்து என்று வெளிப்படையாக சொல்லத் தயங்கும் மக்களை, நான் இந்து தான் என்பதை உணர வைத்து தைரியமாக சொல்லவும் வைத்துள்ளது இந்தக் கண்காட்சி. அடுத்த சில ஆண்டுகளில் அடுத்த கட்டத்திலும்  தனது வெற்றிக் காலடியை எடுத்து வைக்கும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது



(இந்தக் கட்டுரை வலம் இதழின் பிப்ரவரி மாதத்தில் வெளிவந்தது)

http://www.valamonline.in/search?q=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate