வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

பிபிசி வெளியிட்ட தவறான செய்தி

சைவ சித்தாந்த பெருமன்றத்தின் தலைவர் நல்லுார் சரவணன், முனைவர் ஆ.பத்மாவதி எழுதிய மாணிக்கவாசகர் காலமும் கருத்தும் என்ற நுாலை பெருமன்றத்தின் சார்பில் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். 



அந்த நுாலில் வரலாறு தவறாக திரிக்கப்பட்டிருந்தது. அதை எதிர்த்து தமிழகம் முழுவதும் சைவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுவும் ஊடகங்களால் தவறாகத் திரிக்கப்பட்டு இறுதியில் பிரச்னை இந்துத்துவம் எதிர் ஜனநாயகம் என பொய்ப் பிம்பமாகக் கட்டப்பட்டது. 


பிபிசி நிருபர் முரளிதரன்

இந்தச் சூழலில் பிபிசி நிருபர் முரளிதரன், இது குறித்து ஒரு கட்டுரையை பிபிசியில் வெளியிட்டிருந்தார். அதற்கு மறுப்பு தெரிவித்து நான் எழுதிய கட்டுரை தான் இது...

----------------------------

Muralidharan Kasi Viswanathan மாணிக்கவாசகர் நூல் பற்றிய சர்ச்சையில் அடிப்படையான விஷயங்கள் அத்தனையையும் விட்டுவிட்டு மிக மிக மேலோட்டமாக இந்த செய்தியை எழுதியிருக்கிறீர்கள். உங்கள் விருப்பத்தை நான் புரிந்து கொண்டிருக்கிறேன்.

அர்ஜுன் சம்பத் மட்டுமே இதை எதிர்த்தாரா? திரு.பத்மாவதியின் ஆய்வு அலங்கோலங்களை வரலாற்று ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி 30 பக்கங்களுக்கு மேல் மறுப்பு எழுதிய Madhusudhanan Kalaichelvan நூல் மற்றும் ஐந்து மறுப்புகளை நீங்கள் பார்க்கவில்லையா?

சைவ சித்தாந்தப் பெருமன்றத்திற்குள் புகுந்து - என எழுதியிருக்கிறீர்கள். சம்பந்தப்பட்ட வீடியோவையும் நீங்கள் பார்க்கவில்லை எனத் தெரிகிறது.

எச்.ராஜா, பொறுக்கி என ஏசினார் என்பதைக் குறிப்பிட்ட நீங்கள், அடியார்களைத் தெருவில் போகும் நாய்கள் என சரவணன் திட்டியதாக அடியார்கள் கூறிய குற்றச்சாட்டையும் பதிவு செய்திருந்தால், விருப்பு வெறுப்பின்றி இந்த செய்தியை பதிவு செய்தீர்கள் எனக் கருதியிருக்க முடியும். அதையும் செய்யவில்லை.

சைவக் கோயில்கள் ஸ்மார்த்த மயமாகிறது என்பது சரவணன் பிபிசிக்காக சொன்ன 5வது மழுப்பல். இதுவரை நான்குவிதமான மழுப்பல்களை அவர் கூறியுள்ளார். அனைத்தும் எதிர்த்தரப்பு கேட்ட கேள்விக்கான பதில்கள் அல்ல என்பதை இந்த விவகாரத்தை ஆரம்பத்தில் இருந்து கவனித்து வருபவர் யாராக இருந்தாலும் புரிந்து கொண்டிருப்பார். உங்களுக்கு மட்டும் புலப்படாதது ஆச்சரியம்தான்

மயிலாப்பூர், வள்ளுவர் கோட்டம், ஆவுடையார் கோயில் என ஜனநாயக ரீதியில் அடியார்கள் போராடியதைக் குறிப்பிட மறந்தீர்களா? மறுத்தீர்களா? இதுபற்றி அவர்களிடம் கேட்டு நீங்கள் பதிவு செய்திருக்கலாம். வீடியோக்கள் முகநூலிலேயே கொட்டிக் கிடக்கின்றன...அவற்றையாவது பார்த்திருக்கலாம்...உங்களுக்கு அதிலும் விருப்பமில்லை போலும்.

சைவர்களின் குலதெய்வமான ஆளுடைய பிள்ளையாரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாடலில் அந்தணர் வாழ்க என வருவதாலும், நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க என வருவதால் வான்முகில் வழாது பெய்க என்ற சைவ சம்பிரதாய வாழ்த்துப் பாடலை இனி பாடக் கூடாது என்றும் சரவணன் புர்ட்சி செய்ததாலேயே சைவ அடியார்களின் கடும் விமர்சனத்திற்கு ஆளானார் என்பதை தாங்கள் கண்டுகொள்ளவில்லை.

எதிர்ப்பு வந்த உடனேயே சில வீடியோக்களை சரவணன் தரப்பு அவசரம் அவசரமாக அழித்தது சைவத்தைக் காக்கவா என்ற கேள்வியை நீங்கள் அவரிடம் கேட்டிருக்க வேண்டும்.

ஒரு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கு சை.சி.பெ.மன்றத்தில் என்ன வேலை? அவர் நால்வரை ஏற்பாரா? விபூதி உருத்திராக்கம் அணிவாரா? சைவத்தின் கொள்கைகளை ஏற்பாரா? அவரை வழிமொழிய வேண்டிய அவசியம் சரவணனுக்கு என்ன வந்தது? சரவணனுக்கு ஆதரவு தெரிவித்த அத்துணை அமைப்புகளுக்கும் சைவத்தின் மீது ஈர்ப்பு வந்துவிட்டதா? என அடியார்கள் எழுப்பிய கேள்வியில் உள்ள அடிப்படை நியாயத்தைக் கூட நீங்கள் சிந்தியாதது ஏன்?

இப்பொழுதும் கூட சைவர்கள் சரவணனை எதிரியாகப் பார்க்கவில்லை.  சிவனை வழிபடுபவர்கள் என்ற புள்ளியில் சைவர்களில் சரவணனும் அடங்கிவிடுவார். அப்படித்தான் அடியார்களும் அவரைப் பார்க்கின்றனர். ஆனால் சரவணனை இன்று ஆதரிப்போர் அந்தப் புள்ளிக்கு வருவார்களா?

சைவர்கள் கண்ணெனப் போற்றும் திருவிளையாடல் புராணத்தை ஆய்வுப் பார்வையின்றி, ஒருசார் பார்வையாக கட்டுக்கதை என பத்மாவதி அம்மையார் எழுதியதும் இந்தப் பிரச்னைக்கு முக்கிய காரணம் என்பதை மறைத்தது ஏனோ?

கட்டுக்கதை என்பது பற்றியும் எதிர்த்தரப்பு வெளியிட்ட மறுப்பு நூல்கள் பற்றியும் நீங்கள் அம்மையாரிடம் கேட்பதற்கு நேரம் இருந்திருக்கும் என்றே நான் நம்புகிறேன். ஆனாலும் நீங்கள் ஏன் கேட்கவில்லை என்பதையும் நான் புரிந்து கொள்கிறேன்.

யார் வேண்டுமானாலும் யாரைப் பற்றி வேண்டுமானாலும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்பதுதான் கருத்து சுதந்திரம் என பத்மாவதி அம்மையார் தரப்பில் நீங்கள் நியாயப்படுத்தினால் அதுவே எச்.ராஜாவுக்கும் பொருந்தும்தானே...?

சரவணன் தனது துணைக்கு இழுக்கும் வெள்ளைவாரணனார் முதல் அத்துணை சைவ அறிஞர்களின் கருத்துகளும் சரவணன் கூறும் கருத்தும் ஒன்றுதானா என்பதை சரிபார்க்க ஒரு சைவ அறிஞர் கூடவா உங்கள் நினைவுக்கு வரவில்லை?

எதிர்த்தரப்பு என்பது அர்ஜுன் சம்பத் மற்றும் எச்.ராஜா மட்டுமே என தாங்கள் நிறுவத் துடிக்கிறீர்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது...ஆனால் தி.க..முதல் திராவிடக் குஞ்சுகள் வரைத் தூக்கிப் பிடிக்கும் சத்தியவேல் முருகனாரும் சரவணனை எதிர்த்தாரே...அவரிடம் கேட்டிருக்கலாமே...

முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன் மேடையிலேயே சரவணனை கண்டித்தாரே...அவரையும் மறந்து விட்டீர்களா?...
தமிழகம் முழுவதும் திருவாசகத்தைப் பரப்பி வரும் தாமோதரனைக் கேட்டிருக்கலாம்...முகநூலில் இதுகுறித்து எத்தனையோ விவாதங்கள் நடந்தன...அவை பற்றியாவது குறிப்பிட்டிருக்கலாம்...

சரவணன் VS எச்.ராஜா என்ற ரீதியில் சரவணனுக்கு ஆதரவாகத்தான் இந்த விஷயத்தை நீங்களும் கையாண்டிருக்கிறீர்கள்...  உங்கள் விருப்பமும் அதுதான் என்பதை புரிந்து கொள்கிறேன்...

எல்லாவற்றையும் விட இந்து என்ற சொல்லாட்சியை- அந்த அடையாளத்தை - ஏற்காத சைவர்களும் உண்டு என்ற உண்மையை மறந்து சரவணன் VS இந்துத்துவா என குறுக்குசால் ஓட்டுவது எதற்காக என்பதையும் சைவர்கள் புரிந்து கொள்வார்கள். என்ன நடந்தது என்பதே தெரியாமல் நீங்கள் எழுதியதையும் பிபிசி வெளியிட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது.

வாழ்க...நடுநிலைமை..வாழ்க...கருத்து  சுதந்திரம்... வாழ்க... இவாஞ்சலிச  ஜனநாயகம்... வாழ்க... தீராவிடம்...

கீழே...

பிபிசி நிருபர் முரளிதரன், மாணிக்கவாசகர் காலமும் கருத்தும் என்ற நூல் தொடர்பாக தமிழகத்தில் நடந்த போராட்டங்கள் குறித்து எழுதிய கட்டுரை இணைப்பு...


முரளிதரன் கட்டுரையின் முழுவடிவம்:

மாணிக்கவாசகர் புத்தகம்: சைவ சித்தாந்த பேராசிரியரை இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பது ஏன்?

மாணிக்கவாசகர் புத்தகம் குறித்த சர்ச்சை
மாணிக்கவாசகர் குறித்து எழுதப்பட்ட ஒரு புத்தகத்தில் சொல்லப்பட்ட கருத்துகள் ஏற்புடையவை அல்ல என்பதால் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றன.
புத்தகத்தை வெளியிட்ட பேராசிரியர் சரவணன் மீது நடவடிக்கையெடுக்க வேண்டுமென அவை கோரிவருகின்றன.
தமிழக அரசின் தொல்லியல் துறையில் கல்வெட்டு ஆய்வாளராக இருந்து ஓய்வுபெற்ற ஆ. பத்மாவதி என்பவர் 'மாணிக்கவாசகர்: காலமும் கருத்தும்' என்ற புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
இந்தப் புத்தகத்தை சென்னையிலிருந்து செயல்படும் சைவ சித்தாந்தப் பெருமன்றம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.
இந்த சைவ சித்தாந்தப் பெருமன்றத்தின் தலைவராக நல்லூர் சா. சரவணன் என்பவர் செயல்பட்டுவருகிறார்.
சரவணன் சென்னைப் பல்கலைக்கழகத்தின் சைவ சித்தாந்தத் துறையின் தலைவராகவும் இருந்துவருகிறார்.
கடந்த மே மாதம் 27ஆம் தேதியன்று இந்தப் புத்தகம் வெளியான நிலையில், அடுத்த சில நாட்களிலேயே சிலர் இந்தப் புத்தகத்தை எதிர்த்து துண்டுப் பிரசுரங்களை வெளியிட ஆரம்பித்தனர்.
இதற்குப் பிறகு ஜூலை 13ஆம் தேதியன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள சைவ சித்தாந்தப் பெருமன்றத்திற்குள் சிலர் புகுந்து, புத்தகத்தைத் திரும்பப் பெறும்படி தகராறு செய்தனர்
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் இந்து மக்கள் கட்சி நேரடியாக தலையிட ஆரம்பித்தது. புத்தகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னையில் அக்கட்சியைச் சேர்ந்த அர்ஜுன் சம்பத் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற்றது.
இதற்குப் பிறகு திருநெல்வேலியிலும், சென்னையிலும் சில கோவில்களில் சரவணன் சைவ சித்தாந்தம் உரையாற்றுவது தடுக்கப்பட்டது.
பிறகு புத்தகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றையும், இந்து மக்கள் கட்சி நடத்தியது. இதன் பின் பாரதிய ஜனதாக் கட்சியின் தேசியச் செயலரான எச் ராஜா, தன்னுடைய 'இந்து ஆலய மீட்புக் குழு'வின் சார்பில் போராட்டம் நடத்தியபோது இந்த விவகாரத்தைத் தொட்டுப் பேசிய ராஜா, சரவணனை ’பொறுக்கி’ என்றும் ’தற்குறி’ என்றும் குறிப்பிட்டார்.
அதன் பிறகு, செப்டம்பர் 18ஆம் தேதியன்று சென்னைப் பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த ஒரு பிரிவினர், சரவணனை பேராசிரியர் பணியிலிருந்து நீக்க வேண்டுமெனக் கோரி மனு கொடுக்க வந்திருப்பதாகக் கூறினர்.
இதையடுத்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் அம்பேத்கர் - பெரியார் வட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் சரவணனுக்கு ஆதரவாகத் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஆ. பத்மாவதி எழுதியிருக்கும் 'மாணிக்கவாசகர்: காலமும் கருத்தும்' புத்தகம் முக்கியமாக அறந்தாங்கிக்கு அருகில் உள்ள ஆவுடையார் கோவில் குறித்தும் மாணிக்கவாசகரின் காலம் குறித்தும் சில கருத்துகளை முன்வைக்கிறது.
இந்த ஆவுடையார் கோவில், பாண்டிய மன்னன் குதிரைகளை வாங்கக் கொடுத்த பணத்தில் மாணிக்கவாசகரால் கட்டப்பட்டதாக நம்பப்பட்டுவருகிறது.
மாணிக்கவாசகர் புத்தகம் குறித்த சர்ச்சை
ஆனால், பத்மாவதி கல்வெட்டுகளை ஆராய்ந்ததன் மூலம் அந்தக் கோவில் மாணிக்கவாசகரது காலத்தில் கட்டப்பட்டதில்லை என்றும் 13-14ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டதென்றும் கூறியிருக்கிறார்.
தவிர, அந்த ஆவுடையார் கோவிலில் லிங்கம் பொருந்தியிருக்க வேண்டிய ஆவுடையில் அதற்கான துளை ஏதும் இல்லாததால், அந்த கோவில் சிவன் கோவில் இல்லை என்றும், அங்கே மாணிக்கவாசகருக்கென சிறப்பான வழிபாடு இருப்பதால் அது மாணிக்கவாசகருக்கான கோவிலாக இருக்கலாம் என்றும் பத்மாவதியின் புத்தகம் கூறுகிறது.
திருவிளையாடல் புராணத்தில் மாணிக்கவாசகர் தொடர்பாக ஒரு கதை உண்டு.
நரியைப் பரியாக்கிய கதை என்று கூறப்படும் அந்தக் கதையில் பாண்டிய மன்னன் குதிரைகளை வாங்க மாணிக்கவாசகரிடம் பணத்தைக் கொடுத்து அனுப்பியதாகவும் அவர் அந்தப் பணத்தை வைத்து கோவில் கட்டிவிட்டதால், மன்னன் அவரைத் தண்டித்தான் என்றும் அப்போது சிவபெருமான், தன்வசம் இருந்த நரிகளை குதிரைகளாக மாற்றி மதுரைக்கு அனுப்பி, மாணிக்கவாசகரை மீட்டார் எனவும் அந்தக் கதை கூறுகிறது.
ஆனால், இந்தக் கதை வெறும் புராணம் என்றும் வரகுண பாண்டியனுக்கு நாட்டை மீட்டுக் கொடுத்தவரே மாணிக்கவாசகர் என்பதால், கதையில் வருவதைப் போல மன்னன் அவரை தண்டித்திருக்க வாய்ப்பில்லை என்கிறார் பத்மாவதி.
மாணிக்கவாசகர் புத்தகம் குறித்த சர்ச்சை
Image captionஆவுடையார் கோவில், பாண்டிய மன்னன் குதிரைகளை வாங்கக் கொடுத்த பணத்தில் மாணிக்கவாசகரால் கட்டப்பட்டதாக நம்பப்பட்டுவருகிறது.
"அந்தப் புத்தகம் முழுக்க முழுக்க தவறான தகவல்களை முன்வைக்கிறது. அந்தப் புத்தகத்தில் மாணிக்கவாசகரின் காலம் 9ஆம் நூற்றாண்டு என்கிறார்கள். ஆனால், அவரது காலம் 4-5ஆம் நூற்றாண்டு.
அதையெல்லாம் விட்டுவிட்டால்கூட, மாணிக்கவாசகரை சூழ்ச்சிக்காரர் என்று பொருள்படும்படி பேசியிருக்கிறார்கள்.
தவிர, அந்தக் கோவிலில் லிங்கம் இல்லை என்பதால், அதனை சிவன் கோவில் இல்லை என்றும் சொல்கிறார்கள். ஆகவேதான் இந்தப் புத்தகத்தை எதிர்க்கிறோம்." என பிபிசியிடம் கூறினார் இந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத்.
ஆனால், பத்மாவதி தான் ஆய்வுநோக்கிலேயே மாணிக்கவாசகரின் காலத்தை வரையறை செய்திருப்பதாகவும் அதை ஏற்காதவர்கள், அவர்கள் விருப்பத்திற்கு மாணிக்கவாசகரின் காலத்தைச் சொல்லிக்கொள்ளலாம் என்கிறார்.
மேலும், "மாணிக்கவாசகரின் காலத்தில் ஸ்ரீமாறன் ஸ்ரீ வல்லபன் என்ற மன்னன் இருந்தான். அவன் இறந்த பிறகு, இளவரசனின் மாற்றான் தாய் மக்கள் அரியணையை பறித்துக்கொண்டனர்.
அவர்களிடமிருந்து தந்திரமாக நாட்டை மீட்டு, இரண்டாம் வரகுணன் ஆட்சியைப் பிடிக்க மாணிக்கவாசகர் உதவிசெய்தார். இதில் தந்திரமாக என்பதை சூழ்ச்சி மூலம் என்று சொல்லியிருக்கிறேன்.
மாணிக்கவாசகர் நல்லதுக்குத்தானே சூழ்ச்சி செய்தார் என்று சொல்லியிருக்கிறேன். இதில் என்ன தவறு" என்கிறார் பத்மாவதி.
தவிர, அந்தக் கோவில் குறித்து தனக்கு முன்பாகவே பல ஆய்வாளர்கள் ஆராய்ந்து அது மாணிக்கவாசகர் காலத்தில் கட்டப்பட்ட கோவில் இல்லையென சொல்லியிருப்பதைச் சுட்டிக்காட்டும் பத்மாவதி, "அதைத்தான் நானும் சொல்கிறேன். ஆனால், அதை சர்ச்சையாக்குகிறார்கள்" என்கிறார்.
புத்தகத்தில் கூறும் கருத்துகள் ஏற்புடையதாக இல்லை என்றால் புத்தகத்தை எழுதியவரை எதிர்க்காமல், வெளியிட்ட பதிப்பாளரைக் குறிவைப்பது ஏன் எனக் கேட்டபோது, "புத்தகத்தை எழுதிய பத்மாவதி ஒரு மாவோயிஸ்ட் - லெனினிஸ்ட். அவர் அப்படித்தான் எழுதுவார். ஆனால், சைவ சித்தாந்தப் பெருமன்றமே இந்த நூலை எப்படி வெளியிடலாம்? அப்படியானால், அதற்கு ஓர் அங்கீகாரம் வந்துவிடாதா?" என்றார் அர்ஜுன் சம்பத்.
புத்தகத்தை எழுதிய டாக்டர் ஆ. பத்மாவதி தமிழக அரசின் தொல்லியல் துறையில் 30 ஆண்டுகளாக வேலை பார்த்து ஓய்வுபெற்றவர்.
அவரை மாவோயிஸ்ட் - லெனினிஸ்ட் என்று சொல்வது சரியா எனக் கேட்டபோது, "அவர் மாவோயிஸ்டுதான். ஆனால், அவர் புத்தகம் எழுதியதோடு நிறுத்திக்கொண்டுவிட்டதால் அவரை நாங்கள் எதுவும் கேட்கவில்லை.
இந்த சரவணன் எல்லா இடங்களிலும் போய் பேசுகிறார். அதனால்தான் அவரைக் குறிவைக்கிறோம்" என்கிறார் அர்ஜுன் சம்பத்.
மாணிக்கவாசகர் புத்தகம் குறித்த சர்ச்சை
Image caption"நான் சைவம் குறித்துப் பேசுவது பொறுக்காமல்தான் என்னை பல்கலைக்கழகத்திலிருந்து நீக்க வேண்டும் என்கிறார்கள்” - நல்லூர் சா சரவணன்
இந்த விவகாரத்தில் இந்து அமைப்புகளின் தாக்குதலுக்கு இலக்காகியிருக்கும் பேராசிரியர் சரவணனிடம் இது குறித்துக் கேட்டபோது, "நான் அந்தப் புத்தகத்திற்குப் பதிப்பாசிரியர் மற்றும் வெளியீட்டாளர் மட்டும்தான். என்னைக் குறிவைக்கக் காரணம், நான் பல இடங்களில் சைவ சமயம் குறித்து ஆற்றிவரும் உரைகள்தான்.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சைவத் திருக்கோவில்கள் ஸ்மார்த்தர்களின் வழிபாட்டு முறைக்கு மாறிவருகின்றன. அவற்றை நான் தொடர்ந்து கேள்வியெழுப்புகிறேன். அது இவர்களுக்கு சிக்கலாக இருக்கிறது. ஆகவேதான் என்னைக் குறிவைக்கிறார்கள்" என்கிறார்.
இந்தப் புத்தகத்தில் சொன்ன கருத்துகள் எதுவும் புதிதில்லை. ஏற்கனவே மறைமலையடிகளின் மகன் மறை. திருநாவுக்கரசு, வெள்ளைவாரணர் ஆகியோர் கூறிய கருத்துகள்தான்.
நான் சைவம் குறித்துப் பேசுவது பொறுக்காமல்தான் என்னை பல்கலைக்கழகத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் சைவ சித்தாந்தப் பெருமன்றத்திலிருந்து நீக்க வேண்டுமென்றும் இந்துத்துவ சக்திகள் கோரிவருகிறார்கள் என்கிறார் சரவணன்.
சரவணனை பணியிலிருந்து நீக்க வேண்டுமெனக் கோரி ஆளுநர், பல்கலைக்கழக துணைவேந்தர் ஆகியோருக்கு இந்து அமைப்புகள் மனுக்களை அனுப்பியுள்ளன.
தன் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சரவணனும் வழக்குகளைப் பதிவுசெய்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate