சனி, 30 ஏப்ரல், 2011

பெரியபுராணமும் சாதியும் - 2

(தொடர்ச்சி...)

நம்பி ஆரூரர், திருத்தொண்டத் தொகையைத் திருவாரூர்ச் சிவக்கடவுள் உணர்த்தப் பாடினார் என்பதும், நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் அந்தாதியை நாரையூர்ப் பொல்லாப் பிள்ளையார் உணர்த்தப் பாடினார் என்பதும், சேக்கிழார், பெரியபுராணத்தைத் தில்லைக் கூத்துடைக் கடவுள் உணர்த்தப் பாடினார் என்பதும் சைவ உலகக் கொள்கைகள்.

ஆரூர்க் கடவுளும் நம்பி ஆரூரரும் நாயன்மாருள் ஒன்பதின்மருக்கே சாதி வகுத்தனர். நாரையூர்ப் பொல்லாப் பிள்ளையாரும் நம்பியாண்டார் நம்பியும் இருபத்தொன்பதின்மருக்கே சாதி வகுத்தனர். சேக்கிழாரும் (பெரியபுராணம்) தில்லைக் கூத்துடைக் கடவுளும் ஐம்பதின்மருக்கே சாதி வகுத்தனர்.

ஆட்டுவித்த, ஆட்டுவிக்கப் பெற்ற இவ் அறுவர் பெரியாராலும் சாதி காணாதபடி எஞ்சி நின்ற நாயன்மார் பதின்மூவராவர்.

வடமொழியும் தென்தமிழும் நெருங்கி உறழ்ந்து பழகிய காலத்துப் பாடப்பெற்ற பெரியபுராணமானது வடமொழிச் சாதிப் பெயர்ச் சொற்களாகிய பிரம்ம க்ஷத்திரிய வைசிய சூத்திர என்னும் நான்கில் முதல் மூன்றையும் அறவே தன் பாட்டுகளில் கொண்டிலது.

ஆனால், நான்காவதாகிய "சூத்திர' என்னும் பெயரை இருமுறை கொண்டுளது. இருமுறையுள் இளையான்குடிமாறர் வாழ்க்கையில் ஒரு முறை; வாயிலார் வாழ்க்கையில் மற்றோர் முறை.

இவற்றுள்ளும்,"நம்பு வாய்மையில் நீடு சூத்திர நற்குலம்' என்று இளையான்குடி மாறர் வாழ்க்கையில் கூறிய முறையும்; "தொன்மை நீடிய சூத்திர நற்குலம்' என்று வாயிலார் வாழ்க்கையில் கூறிய முறையும் சூத்திர குலத்துக்கு வாய்மையையும், தவத்தையும், நல் என்னும் அடைமொழியையும் சேர்த்து வடமொழி மிருதி நூல், மறைச் சிரசாகிய உபநிடதம் இவற்றுடன் பெரியபுராணம் முரணுகிறது.

ஆதலின் இந்த இரண்டு இடங்களிலும் சேக்கிழார் சொல்லோ, அதற்குப் பதிலாகப் பிறர் சொல்லோ அமைந்தது என்பது அறிவுசால் பெரியர் நெறியுடன் காணற்கு உரியது.

குறுநில மன்னர், பெருநில வேந்தர், இருநிதிக் கிழவராகப் பெரியபுராணத்துள் காணப் பெறுவோரில் பலரையும் வேளாண் தலைவர் என்று கொள்ளற்கு, இற்றைக்கு ஆயிரம் ஆட்டைக்கு முன் எழுந்த கார்மண்டல சதகப்படி கருதல் அளவை இடம் தருகிறது.

நல் நிலையராகிய தவத்தினர் பலகுடிப் பிறப்புள்ளும் காணப் பெறுகின்றார் ஆதலின், திருத்தொண்டர் அந்தாதியில் இயற்பகை நாயனாரைக் குறித்த பாட்டில் "தவனாய்' என்ற சொல்லை "வேதியராய' என்று பெரியபுராணம் கூறுவதும், அந்தாதியில் இளையான்குடி மாறரைக் குறித்த பாட்டில் "மாதவன்' என்ற சொல்லை நற்றவத்தவர் என்று பெரியபுராணம் கூறுவதும் அறிஞர் உற்று நோக்கத் தகுந்தன.

ஒருவாறு இளையான்குடிக்கு வந்த மாதவர், சூத்திரர் மனையில் உண்ணவந்தார் ஆதலின், அவருக்கு நாற்குலத்தில் ஒரு குலப் பெயரையேனும் பெரியபுராணம் நாட்டியதிலது போலும்!

சூத்திரர் மனைக்குக் கடவுளே உண்ண வந்தார் என்னில், இக்காலக் கோயில் கடவுள் முன் வைத்து எடுக்கும் உணவைச் சூத்திரர் ஆக்கவும் தகுதி உண்டன்றோ?

"சதுர்வேத தரோ விப்ரோ சிவ சமஸ்கார வர்ஜித சண்டாளம் பாண்டம் ஆஸ்ரத்தியயதா கங்கா ஜலம்' என்றும், "சிவதீக்ஷõ ஹீநே சிவத்ரோகி' என்றும் உள்ள சிவாகம விதிகளானவை சிவ தீக்கை பெறாதவன் சிவத் துரோகி என்றும் அவன் வேதங்களை எல்லாம் கரை கண்ட உயர்ந்தவனாக இருந்தாலும் அவன் சண்டாளன் என்றும் அவன் கைப்பட்டவை சண்டாளன் கைப்பட்டவை என்றும் கூறுகின்றன.

நமது கோயில்களிலோ இக்காலம் அமுது ஆக்குவோர் சிவதீக்கை இல்லாதவரே. சண்டாளர்க்குச் சூத்திரர் தாழ்வு எனக் கூறும்  நூல் வடமொழியிலும் தென்மொழியிலும் இலது என்பது துணிபே.

                                                   உணவு

1. இளையான்குடி மாறராகிய சூத்திரர் பால் கடவுள் உண்ணவந்தாராம்.

2. ஞானசம்பந்தர் வாழ்வு 462 வது பாட்டில் நீல நக்கர் மனையில் சம்பந்தரும் நீலகண்ட யாழ்ப்பாணரும் வந்த பொழுது "நீலநக்கர் மனையில் எழுந்தருளி, ஆற்று விருந்து எதிர் அமைப்ப அன்பருடன் இன்புற்று அங்கு அமுது செய்தார்' என்றும், 463 வது பாட்டில்,

நீடுதிரு நீலநக்கர் நெடுமனையில் விருந்தமுது செய்து நேர்மை
பாடு மியாழ்ப் பெரும் பாணருந் தங்க அங்கிரவு பள்ளி மேவ

என்றும் கூறிய பெரியபுராணம், நீலநக்கர் வாழ்வு குறித்த 29,30,31 வது செய்யுள்களில் "சீல மெய்த் திருத்தொண்டரோடு அமுது செய்தருளி' என்றும்,

நின்ற அன்பரை நீலகண்டப் பெரும் பாணர்க்கு
இன்று தங்க ஓர்இடம் கொடுத்து அருளுவீர் என்ன
நன்றும் இன்புற்று நடுமனை வேதியின் பாங்கர்ச்
சென்று மற்றவர்க்கு இடம் கொடுத்தனர் திரு மறையோர்

என்றும்,

ஆங்கு வேதியில் அறாத செந்தீ வலம் சுழிவுற்று
ஓங்கி முன்னையில் ஒருபடித்தாய் அன்றி ஒளிரத் 
தாங்கும் நூலவர் மகிழ்வுறச் சகோட யாழ்த் தலைவர்
பாங்கு பாணி யாருடன் அருளாற் பள்ளி கொண்டார்

என்றும் தொடுத்து, ஞானசம்பந்தரும் நீலகண்டப் பாணரும் நீலநக்கரும் ஒருங்கு இருந்து உண்டார் என்பதையும் முத்தீயை நீலநக்கர் வளர்த்து வந்த துõய நடுமனை இடத்தில் பாணர் மதங்க சூளாமணியாருடன் பள்ளி கொண்டார் என்பதையும் இவர்களுடன் துயில நீலநக்கர் உடன்பட்ட காரணத்தால் செந்தீ வடிவச் சிவக் கடவுள் உயர் மகிழ்வுற்றார் என்பதையும் வெளியாக்குகிறது.

3. திங்களூரில் அப்பூதியார் நாவரசரைக் கண்டதும் பெருவிருந்து செய்த முறையை, அப்பூதியார் வாழ்வு 41 வது செய்யுளில்,

மைந்தரும் மறையோர் தாமும் மருங்கிருந்து அமுது செய்யச்
சிந்தைமிக் கில்ல மாதர் திருவமு தெடுத்து நல்கக்
கொந்தவிழ் கொன்றை வேணிக் கூத்தனார் அடியா ரோடும்
அந்தமிழ் ஆளியார் ஆங்கு அமுதுசெய் தருளினாரே

என்றும், சம்பந்தர் வாழ்வு 273 வது செய்யுளில்,

அணையும் திருத்தொண்டர் தம்மோடு ஆண்ட அரசுக்கும் அன்பால்
இணையில் திருவமு தாக்கி இன்பால் அமுது செய்வித்துப்
புணரும் பெருகு அன்பும் நண்பும் பொங்கிய காதலின் கும்பிட்டு

என்றும் முழங்குகிற பெரியபுராணம், அப்பூதியாரும் சம்பந்தரும் அப்பரோடும் மற்றும் அடியவர்களோடும் உடன் இருந்து உண்டார்கள் என்றும், வேளாள அப்பரை அந்தணச் சம்பந்தரும், அந்தண அப்பூதியாரும் வணங்கினர் என்றும் முழங்குகிறது.

வேளாளக் கோட்புலியார் வீட்டில் ஆதிசைவச் சுந்தரர் உண்டனராக ஏயர்கோன் 37 வது செய்யுள் கூறுகிறது.

1 கருத்து:

  1. ஐயா, வணக்கம்.
    தாங்கள் குறிப்பிடும் இளையாங்குடி மாறர் மற்றும் வாயிலார் இருவருடன் நந்தன், அதிபத்தர் ஆகியோர் தற்காலத்து “தலித்“ என வழங்கப் படும் தாழ்த்தப் பட்ட வகுப்பைச் சார்ந்தவரா என அறிய விரும்புகிறேன். அதோடு, கண்ணப்பர் மலைவாழ் பத்தர் என்பதால் அவர் தற்காலத்து எஸ்.டி.வகுப்பினராதல் சரியா?
    மேலும் எந்த எந்த நாயனார் எந்த எந்தச் சாதியைச் சார்ந்தவர் என்பதை விளக்கமுடியுமா?
    நன்றி, வணக்கம்.
    -நா.முத்து நிலவன்,
    புதுக்கோட்டை - 622 004
    எனது வலைப்பக்கம் -http://valarumkavithai.blogspot.in/

    பதிலளிநீக்கு

Translate