ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

பண்டிதர் பேருரை - 4

(இப்பகுதியில் மாணிக்கவாசகர் புத்தரோடு வாது செய்தது சிவபிரானது ஆணையின்படியே என்று காட்டுகிறார் சுவாமிநாதர்.

சுவாமிநாத பண்டிதரின் பேருரை இப்பகுதியுடன் நிறைவடைகிறது. ஆனால் இதன் கடைசி இரு பத்திகள் மட்டும் என்னிடம் இல்லாமல் போயின.



அதனால் எனது வேண்டுகோளின் படி, திருநெல்வேலி கீழரத வீதியில் உள்ள சிவஞான முனிவர் நூலகத்திற்குச் சென்று, அங்கிருந்த "சித்தாந்தம்' இதழின் 1931 மே மாத வெளியீட்டில் இருந்து இரு பத்திகளை எனக்குச் சொன்னார் சகோதரி ஹேமா சௌந்திர ராஜன் அவர்கள். அவர்களுக்கு என் மனப்பூர்வ நன்றிகள்.


அந்த இரு பத்திகளைத் தேடி, நான் சென்னை தரமணியில் உள்ள ரோஜா முத்தையா நூலகத்திற்குச் சென்று தேடிய போது, அங்கு 1931ம் வருடத்திய சித்தாந்தம் இதழ்கள், மார்ச், ஏப்ரல், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் நவம்பர் வெளியீடுகளே இருந்தன. 


எனினும் அவற்றில் ஒன்றில் மற்றொரு அரிய கட்டுரை கிடைத்தது. அதையும் விரைவில் இங்குப் பதிவிடுகிறேன்.


அதே நேரம், இச்சொற்பொழிவு நடந்த இடத்தில், இந்துக்கள் தவிர வேறு மதத்தர்கள் சிலரும் இருந்திருப்பரோ என்று கருத, இதன் கடைசிப் பகுதி இடம் தருகிறது.)


-----------------------------


"தாமே வலிந்து வாது செய்ய வந்தாரோடு வாது செய்து அவரை வெல்லாதவர் மகாபாதகர். அவர் தொடர்பை நீக்க வேண்டும் என்னும் விதி உண்மையால் அவ்விதியும் சிவாஞ்ஞை என்பது பெறப்படுதலின் திருத்தெளிச்சேரி வாதமும் முன்னொடு பின் முரணாமை நன்கு உணர்ந்தேன்.


"சிதம்பரத்தில் மாணிக்கவாசக சுவாமிகள் புத்தரை வாதில் வென்றதும் அவ்வாறாமோ' எனின் அது கூறாமே அமையும். ஆயினும், வினாவியபடியால் விடை இறுக்கின்றேன்:


புத்தகுரு ஈழதேயத்து இருந்து சோழதேயத்துச் சிதம்பரம் வந்து தில்லைவாழ் அந்தணரை வலிந்து வாதுக்கு அழைத்தான். அவர் அவனுடன் வாது செய்ய வல்லர் அல்லராய், மனம் கவன்று அருநித்திரை செய்யும் காலத்து, நடராஜ மூர்த்தி அவர் சொப்பனத்தில் தோன்றி,


"வில்வ வனத்தில் நமது பத்தன் ஒருவன் இருக்கின்றான். அவனை அழைத்து வந்தால் வெற்றி கொள்ளுவான்' என்று திருவாய்மலர்ந்து அருளிச் சென்றனர்.


தில்லைவாழ் அந்தணர் விழித்தெழுந்து ஒருவர் கண்ட கனவை மற்றொருவருக்குச் சொல்லி எல்லார் கனவும் ஒத்திருத்தலான் மிக மகிழ்ச்சியுற்று வில்வ வனத்தில் சென்று பார்த்தபோது, ஓர் அடியார் வீற்றிருப்பக் கண்டு, சென்று அணுகும்போது, மிருகங்கள் வெருண்டோட, அவற்றோடு சுவாமிகளும் சேர்ந்து ஓட்டம் எடுப்ப, அவரை அணுக முடியாதவர்களாய்த் தில்லைவாழ் அந்தணர் மீண்டு வந்து, உள்ளத்து உறுதுயர் தவநனி மீக்கூரக் குறைத் துயில் கொள்ளும் காலை, நடேசப் பெருமான் மீண்டும் அவர் சொப்பனத்தில் தோன்றி, அவர் துயரம் ஒழிப்பான் திருவுளம் கொண்டு, "மாணிக்கவாசகன் என்று அழையுங்கள், வருவான்' எனத் திருவாய்மலர்ந்து அருளி மறைந்தருளினர்.


அந்தணர் அனைவரும் முந்தையினும் பன்மடங்கு உவகைமீக்கூர ஒருங்கு கூடிச் சென்று, "மாணிக்கவாசக சுவாமிகளே!' என்று அழைக்க, முன்போல் ஓட்டம் எடாது எழுந்து வந்தனர்.


அவரை அழைத்து வந்து புத்தரோடு வாதுசெய்த காலத்தில், சிவபிரான் தாம் செய்த சமயத்தை வாது செய்து பிறர் அழிக்க முடியாது என்பதை உணர்த்துதற்கு வாக்குவாதத்தில் புத்தர்களை மாணிக்கவாசக சுவாமிகள் வெற்றி கொள்ளாத வண்ணம் செய்து தமது அருளால் வெல்லலாம் என்பதனை உணர்த்துதற்குப் பேசின புத்தர்களை தமது அருளால் ஊமைகள் ஆக்குவித்தும், பேசாத ஈழ தேயத்து அரையன் புதல்வியைப் பேசுவிப்பித்தும் வெற்றி கொள்ளச் செய்தமையின், அதுவும் சிவாஞ்ஞை என்பது வெள்ளிடை மலை போல் வெளிப்படக் கிடத்தலான், முரணுதல் ஈண்டும் காணப்படாமை நன்று கடைப்பிடிக்க.


"மாணிக்கவாசக சுவாமிகள் புத்தரை வாதில் வென்றதும் சிவபிரான் திருவருள் உபகாரத்தால் நிகழ்ந்தமையின் அதுவும் சிவச் செயல் என்பது உணர்ந்து மகிழ்ந்தேன்.


"இங்கே எடுத்துக் காட்டிய நியாயங்கள் எல்லாம், சைவ சமயிகளுக்குப் புறச் சமயங்களும் அகச் சமயங்களும் சோபான முறையில் என்றும் உடன்பாடு என்பதை நன்கு உணர்த்தின.


"அங்ஙனம் ஆயினும், சைவ சித்தாந்த நூல்களுள் புற மதங்களின் மறுப்புக் கூறப்படுதல் என்னை' என்பை ஆயின், நன்மை பயக்குமாறு விடை கூறுதும்:


"நரர் பயில் தேயம் தன்னில்'  "வாழ்வெனும் மையல் விட்டு'  என்னும் சிவஞான சித்தித் திருவிருத்தங்களான் சோபான முறையாகச் சைவ சமயத்தை அடைந்தவர்கள், பின் அந்தச் சோபான மார்க்கங்களில் கீழ்ப் போந்து பயனை இழவாமல், "உயர்சிவ ஞானத்தைப்' பெற்றுச் சிவபிரான் திருவருளை அடைதல் வேண்டும் என்பது "கரதலாமலகம்' போல் விளங்குதலால், மேலாகிய சைவ சமயத்தை அடைந்தவர்கள் பின்னர்க் கீழாகிய சோபான மார்க்கங்களில் செல்லாத வண்ணம் தடுக்கும் அத்துணையே அன்றிப் பிறிது அன்று எனக் கடைப்பிடிக்க.


தாயுமானவரும் இக்கருத்துப் பற்றியன்றே,


இயல்பென்றும் திரியாமல் இயமம் ஆதி
எண்குணமும் காட்டி அன்பால் இன்பமாகி
பயன் அருளப் பொருள்கள் பரிவாரமாகி
பண்புறவும் சௌபான பட்சம் காட்டி
மயல் அறும் மந்திரம் சிட்சை சோதிடாதி
மற்றங்க நுõல் வணங்க மௌன மோலி
அயர்வறச் சென்னியில் வைத்து இராசாங்கத்தில்
அமர்ந்தது வைதிக சைவம் அழகிது அந்தோ


என்று எடுத்துக் கொண்டு பல்லாற்றானும் வியந்து ஓதி அருளினார். அது நிற்க.


சபையின் கண்ணுள்ள பல்வகைச் சமயப் பற்றுடைய சகோதரர்களே! நீவிர் உங்கள் உங்கள் சமயநூல் விதிப்படி ஒழுகிக் கடவுளை வழிபட்டுப் பயன் அடைதல் வேண்டும். 


அதுபோலச் சைவர்களாகிய நாமும் எங்கள் சைவநூல் விதிப்படி ஒழுகி எமது கடவுளாகிய சிவபெருமானை வழிபட்டுப் பயன் பெறுதல் வேண்டும்.


நீவிர் உங்கள் உங்கள் சமயங்களில் விசுவாசம் வைத்து உங்கள் உங்கள் கடவுளரைக் காலம் தவறாது வழிபட்டுத் தெய்வப் பற்றுடையராய் ஒழுகுதலைப் பிரத்தியட்சமாய்க் காண்கிறோம்.


ஆதலான், நீவிர் உத்தமர். நம்மவர் அவ்வாறு ஒழுகக் கண்டிலம் ஆகலின் அவரை அவ்வாறு கருத இடமில்லை.


அதுபற்றி, நமது சமய தருமங்களை அவர்களுக்கு அறிவுறுத்தருளினால், உங்களைப் போலக் காலம் தவறாது கண்ணுதல் கடவுளை வழிபட்டு உய்வர் எனக் கருதி, அத்தருமங்களை மாத்திரம் அவர்களுக்குப் போதிக்கப் போகின்றோம். நீவிரும் கேட்டு உண்மை உணர்வீராக.

இம்முன்னுரைப் பிரசங்கத்திற்குக் கழகத்தார் அடியேனுக்குக் கொடுத்த கால அளவு அரைமணி நேரமே. இப்பொழுது ஒன்றரை மணி நேரம் பேச நேர்ந்தது. 

அதற்குக் காரணம், சைவ சமயம், மற்றைச் சமயங்களைத் தனக்கு இன்றியமையாத உறுப்புகளாகக் கொண்டு, தான் உறுப்பியாய் நின்று, தேகத்து உறுப்புகளைத் தேகி நேசித்து, யாதாம் ஒரு தீங்கும் வாராமல் காத்தற்போல, மற்றைச் சமயங்களைக் காக்கும் பெரும் தண்ணளி உடைய சமயம் என்பதை சபையில் உள்ள யாவருக்கும் நன்கு தெரித்தல் பொருட்டேயாம்.

ஆகலின், கால அதீதமானது கழகத்தாராலும் அவையோராலும் பிரச்சாரகராலும் மன்னிக்கற்பாலது என வேண்டுதல் செய்து, அடியேன் பிரசங்கத்தை இவ்வளவில் பூர்த்தி செய்கின்றேன். 


(அருஞ்சொற்பொருள்: தேயம் - தேசம்; கவன்று - கவலை அடைந்து; அரையன் - அரசன்; கரதலாமலகம் - உள்ளங்கை நெல்லிக் கனி; தேகி - தேகத்தை உடையவன்; தண்ணளி - பெருங்கருணை; தெரித்தல் - தெரிவித்தல்; கால அதீதம் - கூடுதல் நேரம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate