ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

சைவ மகிமை - 3

 (தொடர்ச்சி...)

இங்கு ஒரு சிறிது சைவ சமய குரவர் பெருமையைக் குறிக்கக் கடவேன்.

அவர்கள் தெய்வ மகிமை பெற்று விளங்குவோர் ஆவர். வடமொழியில் பல ஆசிரியன்மார்கள் நூல்கள் உள. ஆனால் அவை எல்லாம் அவ்வம் முனிவர்கள் அருளிய மொழிகளே என்பதற்குச் சான்றில்லை. அன்றியும் அவை மிகவும் பண்டையன.


ஆனால் நால்வர்கள் கருத்துக்களை அறிவிக்க அவர்கள் அருட்பாடல்களே உள்ளன. அவை எழுந்த காலமும் இரண்டு அல்லது மூன்றாயிர ஆண்டுகட்கு உட்பட்டதே.



பதினெண் புராண வாக்கியங்கள் அனைத்தையும் வியாச வாக்கியம் என்ன முடியாது. பிரமசூத்திரம் மட்டும் அவர் வாய்மொழி என்னலாம். பாடியம் எழுதினோர் சுருதி துணை கொண்டு பலவாறு எழுதி, அவரவர் உரையையே "சுருதி சம்மதித்தது' "சரஸ்வதி ஒப்பியது' என்றெல்லாம் உயர்த்திக் கூறலாயினர்.

இந்நூல்களை எல்லாம் விட நம் சமயாசாரியர் அருளிப் பாடுகள் சிறந்தவை. அவர்கள் செயல்கள் சிவன் ஒருவன் உளன் என்பதைக் காட்டுகின்றன.



இதையும் நம்பாத ஒருவன் வேறெதைத் தான் நம்புவான்? மற்ற பல நம்பிக்கைகளிலும் அவர்கள் வாக்கியங்களை நம்பல் சிறந்ததாகும்.

அவர்கள் பாடல்களைச் சிவபெருமான் அங்கீகரித்துள்ளார். அவர்களை நம்பினோர் அவர்கள் அடைந்த இடத்தை அடையலாம்.

இனி "உருத்திராக்கம்' என்பது "ருத்ரம்' "அட்சம்' என்னும் இரண்டு சொற்களால் ஆயது. அதன் வரலாறு நீவிர் அறிந்ததே. அதுவும் சிவ சம்பந்தம் உடையது. திருநீற்றிற்குள்ளது போலவே இதற்கும் மகிமை உண்டு.

சிவ மந்திரமாவது மறக்கக் கூடாததோர் தெய்வ ஒலி என்று சுந்தரமூர்த்தி நாயனார் "நற்றவா உன்னை நான் மறக்கினும் சொல்லுநா நமச்சிவாயவே' என்னும் அரிய மொழிகளால் அறிவுறுத்தி அருளினார்.

இம்மந்திரம் வேத இதயத்துள்ளது. சைவர்க்கு இது இன்றியமையாதது. "மந்திரம்' என்னும் கிளவி, நினைப்பவனைக் காப்பது என்னும் பொருள் உடையது. இச்சிவ மந்திரத்தைத் தூலம், சூக்குமம், காரணம் என்று நூல்கள் பிரிப்பினும் அவை எல்லாம் உண்மையில் ஒரே பயன் உள்ளவையே.

ஆகமக்காரர் இதில் பதி பசு பாச லட்சணம் கூற முற்படுவர். எனக்கு இதில் தடையில்லை. இம்மந்திரம் செபிப்போர் பிறமந்திரம் எதையும் கையாளார். பின்னர்க் காரணம் காட்டுவல். எனது கோட்பாட்டை,

மடமோட்டும் கருணைதனை மறவேன்
நெஞ்சுள அளவும் மாற்றார் நூலைத்
தொடமாட்டேன் அவர் உரைக்கும் உரைகேளேன்
அனியாயத் தொடக்கர் கோட்குள்
படமாட்டேன் அருள் சுரந்து வினாய ஒரு
மொழிப் பயனில் படரும் நோக்கம்
விடமாட்டேன் இனிது அளித்தி எனது குகப்
பிரமம் என விளங்கு எம்மானே

என்னும் பாட்டு உணர்த்தும்.

ஆசாரிய சுவாமிகள் நால்வரும் ஒரே தெய்வ உபாசகர் என்பதைச் சைவர்கள் கருத்து ஊன்றிப் பார்க்க வேண்டும். பின்வரும் எடுத்துக் காட்டுகளைக் கருதுக:

கருமான் உரியாடைக் கறைசேர் கண்டத்தெம்
பெருமான் கழல் அல்லால் பேணாது உள்ளமே - சம்பந்தர்

சென்று நாம் சிறுதெய்வம் சேர்வோம் அல்லோம்
சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம் -  அப்பர்

மறிசேர் அங்கையனே மழபாடியுள் மாணிக்கமே
அறிவே உன்னை அல்லால் இனியாரை நினைக்கேனே - சுந்தரர்

கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு குடிகெடினும்
நள்ளேன் நினது அடியாரொடு அல்லால் நரகம் புகினும்
எள்ளேன் திருவருளாலே இருக்கப் பெறின் இறைவா
உள்ளேன் பிறதெய்வம் உன்னை அல்லாது எங்கள் உத்தமனே - மணிவாசகர்



இங்ஙனமே அருணகிரிநாதரும்

படிக்கின்றிலை பழநித் திருநாமம் படிப்பவர் தாள்
முடிக்கின்றிலை முருகா என்கிலை முசியாமல் இட்டு
மிடிக்கின்றிலை பரமானந்தம் மேற்கொள விம்மி விம்மி
நடிக்கின்றிலை நெஞ்சமே தஞ்சம் ஏது நமக்கினியே

என்று முடிவாகக் கூறுகின்றார். இன்னன பல்ல. இந்நிலை வடமொழி மறைக்கும் சம்மதமானது.

உதாரணம்:

(அ) "சிவ ஏகோ த்யேயச் சிவம்கரஸ் ஸர்வமந்யத் பரித்யஜ்ய' (அதர்வசிகை)

பொருள்: அந்நியமான யாவையும் விட்டு, சிவம் எனும் பெற்றியால் மங்களத்தைச் செய்யும் சிவனையே தியானிக்க வேண்டும்.

(ஆ) "தஸ்மாத் ஸர்வாந் பரித்யஜ்யத் யேயாந்
           விஷ்ண்வாதி காந்ஸுராந்
            சிவஏவ ஸதாத்யேயஸ் ஸர்வ
            ஸம்ஸார மோசக:'    (சரப உபநிஷத்)

பொருள்: ஸம்ஸார துக்கநாச முக்திப் பிராப்தியின் பொருட்டு விஷ்ணு முதலிய ஸர்வ தேவர்களை விட்டு எஞ்ஞான்றும் தியேயனாக உள்ள சிவனையே தியானிக்க வேண்டும்.


இவை போன்ற பிரபலப் பிரமாணங்கள் ஒருவனுக்குப் பல மூர்த்தி வழிபாடு கூடாது என்று கூறுவது நன்றாய்த் தெரிகின்றது. ஒரே மூர்த்தியும் ஒரே மந்திரமும் வேண்டும். இதைச் சைவர் நன்கு கவனிப்பதில்லை. பல தெய்வ வழிபாடு அவர்கட்குக் கூடாது.

சொரூப லட்சணத்திற்குப் போனால் எல்லை ஒன்றும் ஏற்படாது. அது ஞானிகட்கு உரியது. ஏனையோர் உருவத்தைப் பற்றிச் சொல்வோர், சரியையாதி மூன்றும் மூர்த்தியைப் பற்றியவை ஆதலின்.

சொரூபம் மூர்த்தம் அல்ல. மூர்த்தி அதற்கு ஆசாரியன். பெரும்பாலோர் சாரூபத்திற்குள் நிற்போர். இவர்கள் ஒரே மூர்த்தியை வழிபடாவிடின், பொதுக் கதிக்கு உரியராய் இந்திரபதம் மட்டும் கிடைக்கப் பெறுவர்.

தியானம் என்பதும் ஒரு மூர்த்தி பாவனையில் ஆவது; இரண்டு மூர்த்தி உபாசனை கூடாது. இப்படிச் செய்வது, ஒரு கோயிலை இடித்து இன்னொரு கோயிலைக் கட்டுவதை ஒக்கும். சிவனையே கதியாகக் கொள்பவன், விண்டுவாதி தேவர்களை விட வேண்டும். பிற மூர்த்தி உபாசகர்கட்கும் இது போன்ற நியமம் ஏற்றதே.

ஆனால், மற்ற தேவர்களைக் கண்டால் பொதுவகையில் வழிபடுமின். பல சில்லரை மந்திரங்களை விரும்பன்மின். எத்துன்பம் வரினும் உம்மொரு மூர்த்தியையே கொண்மின்.

ஆசாரிய சுவாமிகள் நால்வரும் சிவனைத் தவிர வேறு எத் தெய்வத்தின் மேலும் பாடவில்லை. கருதுமின். அவர்கள் காலத்துக்கு முன்பு பல தெய்வ வழிபாடு இருந்தது. அவர்கள் ஒரே தெய்வம் வேண்டும் என்று வற்புறுத்தினர்.

கிறிஸ்துவ மதத்தில் கிறிஸ்துநாதரே மூர்த்தி ஸ்தானத்தில் உள்ளார். இஸ்லாத்தில் முகம்மது நபி அந்நிலையில் நிற்கின்றார்.

இவ்வுண்மைகளை எல்லாம் கருதி, சைவ சமயாசாரியர்கள் உபதேசித்து அருளியபடி சைவர் ஏக மூர்த்தி வழிபாட்டில் உறைத்து நிற்கக் கடவர்.

உங்கட்குச் சிவன் கூட வேண்டியதில்லை; சம்பந்தரைப் பற்றினால் சாலும். இவரைப் பற்றினால், சிவனைப் பற்றியுள்ள இவர், அவரிடம் உங்களைச் சேர்ப்பர். சீகாழிக் கண்ணுடைய வள்ளலார்க்கு இம்முறை பயன்பட்டது.

என் ஆணை என் ஆணை என் ஆணை ஏகம் இரண்டு
என்னாமல் சும்மா இரு என்று - சொன்னான்
திருஞான சம்பந்தன் சீகாழி நாடன்
அருளாளன் ஞான வினோதன்

என்னும் அவர் திருவாக்கால் உணர்க.

முத்தியில் இருப்பவர் தோன்றுவரோ என்று ஐயுற வேண்டா. திருவுளப்பாட்டின்படி எதுவுமாம். அதனால் அவர் முத்தி நிலை கெடாது. இப்படிப் பலர் இருக்கலாம்.

இப்பெருநிலை இந்நாள் சைவர்க்கு வெகு தூரமாய்விட்டது. நால்வர் பாட்டைத் தாளம்போட்டுப் பலர் பாடுகிறார்கள். ஆனால் பல தெய்வங்களையும் கும்பிடுகிறார்கள்.

இச்சென்மம் கடைத்தேறுவதற்கு ஒரு தெய்வ வழிபாடு அவசியம். இது செய்யாதவன் முத்தி மார்க்கத்தின் முதற்படியிலும் கால் வைக்காதவன் என்று கட்டுரைக்கின்றேன்.


1 கருத்து:

  1. முஸ்லிம்களுக்கு அல்லாஹ் தான் மூர்த்தி; முகமது நபி இல்லை. அய்யா அவர்கள் வாய்த்தவறுதலாக இதைச் சொல்லிவிட்டார் என்றே இதைக்கொள்ளவேண்டும்

    பதிலளிநீக்கு

Translate