சனி, 16 ஏப்ரல், 2011

சைவ மகிமை - 2

(தொடர்ச்சி...)

சிவம் என்பது அந்வய நாமம். முத்திக்குச் சிவம் என்னும் பேர் உண்டு. எனவே முத்தி விரும்புவோர் எல்லாம் சைவர் என்று கோடல் கூடும்.

சிவத்திற்குத் தடத்த லட்சணம் எனவும் சொரூப லட்சணம் எனவும் இரண்டு லட்சணம் உண்டு. இவற்றுள் தடத்த லட்சணச் சார்பாக மட்டும் இங்குச் சில விவகரிப்பேன்.




திருநீறு, திருக்கண்மணி, சிவ மந்திரம், சிவன் உருத் தியானம், சிவன் அடியவர் பூசை ஆகிய இவை சிவ சம்பந்தமாகி ஒருவனைச் சைவன் என நிறுவும். இவை உடையானைச் சைவன் என அழைக்க யாதொரு தடையுமில்லை.

இவற்றுள் ஒன்றிரண்டு பொருந்தாவிடினும், இரண்டு முக்கியம். அவை சிவ நாம உச்சாரணமும் சிவன் அடியார் பூசையும். சிவமந்திரம் பல இருப்பினும் சிவ சப்தம் உள்ள மந்திரமே சைவத்திற்கு உரியது. அதனோடு ஒட்டி வேறு எதையும் சேர்க்கல் ஆகாது. அச்சப்தம் சிவனை முன்னிட்டிருப்பது; சிவன் ஆணை வழிநிற்றலும் கேட்கப்படும்.



எனவே, "சைவன்' என்னும் சொல் மிகச் சிறப்பாக ஏற்படுவது. சிவனது மகிமை எங்கு எங்குச் செல்லுகின்றதோ அங்கெல்லாம் இச்சப்தமும் எழும்.

இச்சிவ மூர்த்தியின் விடயமாக ஒரு நிலை, எல்லாத் தத்துவங்கள் வரையிலும் உள்ளது. இது சமய நிலை. மற்றொன்று தத்துவ அதீதமானது. இது, சமயத்திற்குப் புறம்போ எனின், அன்று.

சைவ சமயமே சமயம் சமயாதீதப் பழம்பொருளைக்
கைவந்திடவே மன்றுள்வெளி காட்டும் இந்தக் கருத்தைவிட்டுப்
பொய்வந்துழலும் சமயநெறி புகுதவேண்டா முத்திதரும்
தெய்வசபையைக் காண்பதற்குச் சேரவாரும் செகத்தீரே

என்னும் தாயுமானார் திருவாக்கைக் கருதுக. பிற சமயங்களைப் பற்றி யான் பேச வரவில்லை. அவைகளைப் பற்றிப் "பொய்வந்துழலும்' என்று தாயுமானார் புகன்றதன் கருத்தை, "சமயாதீதப் பழம்பொருள்' என்றதை விளக்கும் முகத்தால் புலப்படுத்துகின்றேன்:

சைவ சமயம் ஒரு மரம் போன்றது. அதில் இலை, அரும்பு, காய், கனி உண்டு. கீழ்நிலையினும் மேல்நிலை ஏற்றம். எங்கே ஆதி ஏற்பட்டதோ அங்கே அந்தம் உண்டு. பழத்தில் வித்துண்டு.

மேற்பாடலில், "பழம்பொருளை' என்பதற்குப் பழமாகிய பொருளை என்று பொருள் கொள்ளலாம். அதனைச் சைவம் தன்பால் கொண்டுள்ளது.

கிளையில் உள்ள வரை பழம் மரத்தோடு சேர்ந்தது. கிளையை விட்டு நீங்கின பின்பே புசிப்பர் மானிடர்.

அப்படி வேறுபடுத்தும் தன்மையில் சைவம் சமய அதீதம் ஆகின்றது. ஆனால் அப்போதும் அது பழமே. கொம்பரை விட்டுக் களைந்ததுதான் வேறுபாடு.

சமயமே "சமயம் கடந்த மோன சமரசமாய்' விடுகின்றது. ஆனால் பழம் தின்றவன் காய் தின்னான் என்னும் நுட்பத்தையும் உணர்க.

(இங்குக் கீழ்வரும் மேற்கோளைக் கருதிக் கோடல் பயன் உடைத்தாம்:
"சைவ சமயமே சமயம்' என்றதில் உள்ள ஏகாரம் குழுவினின்று பிரிக்கும் பிரிநிலையாம். துணிதல் பொருள் தரும் தேற்றேகாரம் எனினும் இழுக்காகாது.

"சைவ சமயம்' என்பது தளிர்த்துப் பூத்துக் காய்க்கும் ஒரு தரு ஒக்கும். "சமயாதீதம்' என்பது அத் தருவில் பழுக்கும் பழம் கொம்பரை விட்டு நீங்கி அனுபவிப்பார்க்கு அனுபவப் பொருள் ஆதல் ஒக்கும். "இல்லது வாராது' எனும் நியாயத்தின்படி இருந்து பழம் போல வெளிப்படத் தக்க அது "பழம்பொருள்' எனப்பட்டது.  ஸ்ரீமத் சுவாமிகளே அருளிச் செய்த சைவ சமய சரபம்; பக்கம்: 276, 277)

ஆயின் ஒவ்வொருவனும் வரிசையாகத் தான் சமய ஏணிப்படியில் போக வேண்டுமோ? சாமு சித்தன் ஆவான் முற்பிறப்பில் விட்ட இடத்தில் இருந்து, இப்பிறவியில் தொடங்குவன்.

"எப்போது விரக்தி தோன்றிற்றோ அப்போதே ஞான நெறி நிற்க' என்பது சுருதி. இதற்குக் காலவரம்பில்லை. சரியை, கிரியை, யோகங்களை எந்நாளும் ஒவ்வொருவனும் செய்ய வேண்டும் என்னல் தவறு. வேண்டும் என்னில் ஒரு நாளும் முத்தியில்லாமல் போம்.

இங்ஙனம் கூறிய சைவ சமயம் இறைவன் அனுக்கிரகத்திற்கு நிலைக்களமாய் விளங்குவது. இவ் அனுக்கிரகத்தை ஐம்முகச் சிவம், அறுமுகச் சிவம் என்னும் இரண்டு மூர்த்தி விஷயமாய்ப் பெறலாகும். இங்கு ஐம்முகச் சிவனைப் பற்றிப் பேசுவல்.






சாதகற்குச் சமய ஏற்பாடு அவசியம். அஃது இல்லாவிடில் அவன் முயற்சி, கால் இல்லாதவன் நடக்க முயலுவதை ஒக்கும். மக்கள் வாழ்க்கைக்கு ஏதோ ஒரு சமயம் வேண்டும்.

"திக்பஸ்ம ரஹிதம் பாலம், திக்ராமம் அசிவாலயம்திக் அநீசார்சனம் ஜன்ம திக்வித்யாம் அசிவாச்ரயாம்' என்னும் சுருதி யாரை நோக்கிக் கூறுகின்றது? பொதுவில் யாவரையும் நோக்கியே.

இந்த பிருஹஜ்ஜாபாலச் சுருதியின் பொருள்:"பஸ்மம் அணியாத நெற்றியைச் சுடு. சிவாலயம் இல்லாத கிராமத்தைக் கொளுத்து. சிவார்ச்சனை இல்லாத ஜன்மத்திலே தீயை வை. சிவனை ஆச்சிரயிக்காத சாத்திரத்தை எரித்து விடு' என்பதாம்.

எனினும் சிவன் அடியார்க்கு அது சிறப்பு வகையில் முக்கியமாகும். "பூத்யின ப்ரமதி தவ்யம்' என்னும் தைத்திரீயம் திருநீற்றை விடக் கூடாது என்று வற்புறுத்தி ஆணையிடுகின்றது.

சிலர், "மனக்குவிவைப் பற்றி இப்படி வற்புறுத்தாது சாம்பல் பூச்சுக்கு இந்த மகிமை தருவது எற்றுக்கோ? திருநீறு அணிக என்னும் விதி அவசியம் தானோ' என்று ஆசங்கிப்பர்.

கடவுள் எதை எதை ஏன் அமைத்தார் என்று நாம் காரணம் சொல்ல முடியுமா? ஒரு மரத்தில் பூக்கள் பல நிறத்தோடு பூத்ததற்குக் காரணம் கூற முடியுமோ?

முகத்தில் இரண்டு கண்ணும் இருப்பானேன்? பின்புறம் ஏன் இருகண்கள் இல்லை? இப்படிப் பல கேட்கலாம்.

ஆகையால், எது சிவனால் கட்டளையிடப்பட்டதோ அதைச் செய்க. "செய்யாமல் இருந்தால் என்ன' என்பது கடவுள் கட்டளையை மீறினால் என்ன என்று கேட்பதே ஆகும்.

ஆனால் இங்குக் கவனிக்க வேண்டியது, இது கடவுள் கட்டளைதானோ என்பது. "மந்திரமாவது நீறு' "வேதத்தில் உள்ளது நீறு' என்றெல்லாம் எழும் ஆளுடைய பிள்ளையார் திருவாக்கே சாட்சி.



அவர் அது கொண்டு சமணக் கூன்பாண்டியன் சுரம் தீர்த்தார். அச்சுரத்தைத் தீர்க்க அவர்க்கு வேறு வகை இருந்தும், வைச சின்னமாகிய விபூதியைக் கொண்டு நீக்கி அதன் பெருமையை நாட்டினார்.

நோயைக் கொல்ல விபூதி கருவியாயிற்று. சிவபெருமான் திருவுள்ளத்தை நாம் அறியாவிடினும் இக்காரியத்தில் திடபத்தி உண்டாக வேண்டும். வேறு மருத்துவ நூல் காரணங்களும் இருப்பினும் அவை ஈண்டு வேண்டப்படா.

சிவன் ஆணைக்குக் கீழ்ப்படிக.

"வெண்ணீறு அணிகிலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே' என்ற இடத்து, சிவ வழிப்பட்டார்க்கு இது போதிக்கத் தக்கது. படாதார்க்கு போதிக்கத் தக்கதன்று என்பது மணிவாசகர் கருத்து.

ஒரு சமய இனத்தவர் என்னும் சமய ஒற்றுமை நோக்கி இங்ஙனம் அருளினார் என்று நினைக்கின்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate