ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

பண்டிதர் பேருரை - 1

(எனது சொந்த ஊரான திருநெல்வேலி பேட்டையில், கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில், திருஞானசம்பந்தர் திருவருட்கழகம் என்ற அமைப்பு செயல்பட்டு வந்தது. இதுபற்றி, எனது ஊர்ப் பெரியவர்கள் சிலர் சொல்லி நான் கேட்டிருக்கிறேன்.


இக்கழக விழாக்களில் பிற்காலத்தில் பிரபலமாக இருந்த நாகர்கோயில் ஆறுமுக நாவலர் கலந்து கொண்டார் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை இக்கழகம் செயல்பாட்டில் இருந்திருக்க வேண்டும். இக்கழகம் பற்றிய விரிவான செய்திகள் இதுவரை எனக்குக் கிடைக்கவில்லை.

1931ல் (?) இக்கழகத்தின் நான்காவது ஆண்டு விழாவில், ஈழத்துச் சைவப் பெரியார் சுவாமிநாத பண்டிதர் ஓர் உரையாற்றினார்.

அக்காலகட்டத்தில் சென்னையில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த சித்தாந்தம் இதழில், பண்டிதரது உரை வெளியானது.

திருநெல்வேலி டவுன், கீழரத வீதியில் இயங்கி வரும், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்திற்குச் சொந்தமான சிவஞான முனிவர் நூலகத்திற்கு, 2001ம் ஆண்டுக்குப் பின் சில ஆண்டுகள், நான் தொடர்ந்து சென்றிருக்கிறேன்.

அப்போது என் கண்ணில் பட்ட அரிய கட்டுரைகள் மற்றும் சிறு நூல்களை அப்போதிருந்த நூலகரின்  அனுமதி பெற்று பிரதி செய்து வைத்துக் கொண்டேன்.

அந்தப் பிரதிகளை நேற்றுத் தேடிய போது அகப்பட்டன பண்டிதர் உரை உள்ளிட்ட சில கட்டுரைகள்.

பண்டிதர் காலத்தில் யாழ்ப்பாணத்திலும் தமிழகத்திலும் கிறிஸ்தவ மதமாற்றம், இந்துக்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. அதனால் தானோ என்னவோ இச்சொற்பொழிவில் ஆங்காங்கே கிறிஸ்தவத்தைக் கண்டனம் செய்து, சைவர்களுக்கு அறிவுறுத்துகிறார் பண்டிதர்.

இச்சொற்பொழிவு மிக நீண்டதாக இருப்பதால் பகுதி பகுதியாகத் தருகிறேன். நூறாண்டுகளுக்கு முந்தையது என்பதால், இதில் இடம் பெற்றுள்ள சில சொற்களுக்கு ஒவ்வொரு பகுதியின் முடிவிலும் அருஞ்சொற்பொருள் தந்திருக்கிறேன்.)

----------------------------

(இது திருநெல்வேலி பேட்டை திருஞானசம்பந்தர் திருவருட்கழக நான்காவது ஆண்டு நிறைவிழாவில் தலைமை வகித்த ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத பண்டிதர் அவர்கள் நிகழ்த்திய முன்னுரையின் குறிப்பாகும்.)

"ஆனைமுகன் ஆறுமுகன் அம்பிகைபொன் அம்பலவன்
ஞானகுரு வாணிபதம் நாடு'

இப்பெரியார் சபைக்குத் தலைமை வகித்து அதனை நடாத்துதற்குரிய அறிவின் மதுகை அற்பமும் இல்லாத "அடியார்க்கும் அடியேன்' பெரியார் ஆஞ்ஞையை மறுத்துரைப்பின், அது "மூத்தோர் சொன்ன வார்த்தை அமிர்தம்' என்னும் தெய்வப் புலமை ஒளவைப் பெரியார் திருவாக்கிற்கு எதிர் வாக்காய் முடிந்து பழிபாவங்கட்கு ஆளாக வேண்டும் என்று அஞ்சியே அதற்கு உடன்பட்டேன் என்று கடைப்பிடித்து அருள்மின் கலைவல்லீர். அது நிற்க.

சைவப் பிரசங்கம், ஏனைப் பிரசங்கம் போலாது, முடிந்த பெரும் பேறாகிய வீட்டு இன்பத்திற்குக் காரணமாகிய உபதேச இயல்பிற்று என்பதனை யாவர்க்கும் அறிவுறுத்தற்கன்றே கயிலையங்கிரியிலே, கல்லாலவிருக்கப் பந்தர் நீழற்கண் சனகரை உள்ளிட்ட அதிமேதாவியராகிய சபையாருக்கு உண்மை உபதேச முறையில், ஸ்ரீகண்ட சரீரசரீரியாகிய சிவபிரான் தக்கிணாமூர்த்தியாகி, அக்கிராசனாதிபதியாகத் திவ்வியாசனத்தில் எழுந்தருளியிருந்து சரியாபாதம், கிரியாபாதம், யோகபாதம், ஞானபாதம் நான்கையும் அறிவுறுத்தருளினார்.

ஆதலான், தக்கிணாமூர்த்தி என்றுள்ளாரோ, அன்றே சைவப் பிரசங்கமும் அதற்குரிய சபையும் தலைமை வகித்தல் உத்தியோகமும் உண்டு என்பதை நன்குணர்ந்து, நம்மவர், பாதிரிமார் பிரசங்கம் செய்தலைக் கண்டு சைவரும் பிரசங்கம் செய்யத் தலைப்பட்டார் என்று சொல்லும் சொல்லை இற்றைப் பகல் தொடங்கி முற்றத் துறந்து உண்மை கடைப்பிடித்து நன்மை அடைதல் வேண்டும்.

இன்னும், காமிக ஆகமத்திலே சைவ போதகத்தின் பொருட்டு ஆலயங்கள் தோறும் பிரசங்க மண்டபம் கட்டப்படல் வேண்டும் என்றும், அவற்றிலே தரிசனத்தின் பொருட்டு வரும் அடியார் கேட்டு உய்யும் வண்ணம் சைவ போதகம் செய்தல் வேண்டும் என்றும் கூறப்பட்டிருத்தலை இன்னும் கண்டு களிக்கலாம்.

இதனாலும், சைவப் பிரசங்கம் செய்தல் சைவ சமயிகளுக்கு ஆதி தொடங்கி உளதாகிய மிகு விசேட புண்ணியச் செயலாம் என்பதை நன்குணர்க.

இன்னும், பிரமோத்தர காண்டத்திலே, திருக்கோகரணத்திலே சிவாலயத்திலே, ஒரு விசேட தினத்திலே சைவபோதக மண்டபத்திலே, ஓர் ஆசிரியர் போதித்துக் கொண்டிருந்தார் என்றும், தரிசனத்தின் பொருட்டு அங்கு வந்த பரத்தை ஒருத்தி அவர் போதனையைக் கேட்டுப் பரத்தைமை பாவம் என்றும் அதனால் நரகப் பிராப்தி எய்தும் என்றும் உணர்ந்து அன்று தொட்டுப் பரத்தைமையைப் பாற்றி உலக இயல்பைத் துறந்து சிவத்தைப் பற்றி நின்று வீடு பெற்றாள் என்றும் கூறப்படுதலானும் சைவப் பிரசங்கம், சைவ சமயம் எப்போது உண்டோ அப்போது உண்டு என்பதுதானே போதரும் என்க.

இனி, சைவ சபைக்கு ஆதியில் அக்கிராசனாதிபதி தக்கிணாமூர்த்தியேயாம் என்பதை மேலே கூறினாம். பின்னர்ச் சந்தானமுறைக்கண் திருநந்தி தேவர், சனற்குமாரர், சத்தியஞான தரிசனிகள், பரஞ்சோதி முனிவர், மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாசாரியார், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவாசாரியார் என்னும் இவர்களும் அவ்வாறு இருந்தார்கள்.

இவர் பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனபதிகளும், தருமபுர ஆதீனபதிகளும் அக்கிராசனபதிகளாக இன்று வரை இருத்தலானும் சைவப் பிரசங்கம் எல்லாப் பிரசங்கட்கும் முந்தியது என்பதை மொழியவும் வேண்டுமோ? நிற்க.

(அருஞ்சொற்பொருள்: அறிவின் மதுகை - அறிவின் திறம் அல்லது வலிமை; ஆஞ்ஞை - ஆக்ஞை என்ற சம்ஸ்கிருதச் சொல்லின் தமிழ், ஆணை என்பது பொருள்; இயல்பிற்று - இயல்பை உடையது; கல்லாலவிருக்கப் பந்தர் நீழற்கண் - கல்லாலம் என்ற மர நிழலில்; தக்கிணாமூர்த்தி-  தட்சிணாமூர்த்தி; அக்கிராசனாதிபதி - சபைத் தலைவர்; இற்றைப் பகல் - இன்று முதல்; சைவ போதகம் - சைவ சமய சொற்பொழிவு; நரகப் பிராப்தி- நரக பலன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate