புதன், 15 ஏப்ரல், 2009

ஆனந்த நடமாடுவார்

ண்ணன், பாரதி, முருகன், காமன், முதலிய தெய்வங்கள் ஆடிய நடனம் பற்றிய சிலப்பதிகார உரை மற்றும் கலித்தொகை முதலிய சங்க இலக்கியங்களிலிருந்து நாம் அறிகிறோம்.


ஆயினும் ‘ஆனந்த நடனம்’ ‘ஆனந்தத் தாண்டவம்’ என்றவுடன் நம் கண் முன் தோன்றுவது கூத்தபிரானாகிய நடராஜப் பெருமானின் திருவுருவம் தான்.

கொக்கிறகு, கங்கை, கபாலம், பிறைசூடி, எண்டிசையும் விரிந்த சடை சுழல, உடுக்கை ஒலி எழுப்ப, அங்கையில் ஏந்திய அக்கினி ஜொலிக்க, வலது காலை முலகன் மீது ஊன்றி, இடதுகாலை எடுத்து வீசி, ‘பயப்படாதே’ என அபயம் அளிக்கும் ஒரு கையுடன் இறைவன் ஆடும் திருநடனத்தைக் கண்டு மனம் உருகாதவர் யார்?

பரதக் கலையை உலகிற்குத் த்ந்த இறைவனின் இந்த ஆனந்த நடனத்தை சங்க இலக்கியங்களிலிருந்து இன்று வரை இவ்வுலகமே வியந்து போற்றுகிறது.

இந்தப் பேரானந்தப் பெருநடனத்தைக் காண்பதற்காகவே வெறுக்கத் தக்க இந்த மனிதப் பிறவியும் வேண்டத் தக்கது என்கிறார் திருநாவுக்கரசு சுவாமிகள்.

மேல் நாட்டார் இதனை வியந்து ‘COSMIC DANCE’ என்று போற்றுகிறார்கள்.
இந்த ஆனந்தத் தாண்டவத்தை கல்லிலும் செம்பிலும் மரத்திலும் ஓவியத்திலும் வடித்தளித்து இவ்வுலகிற்கு ஈந்த பெருமை தமிழனுக்கே உரியது.

தாண்டவம் – பெயர்க் காரணம்


பரமசிவனாருடைய முதல் மாணவர் தண்டு எனும் பெயருடைய நந்திகேசுரர் ஆவார். இறைவன் இவருக்கு நாட்டியக் கலையைக் கற்பித்தான். இவர் அதனை பரத முனிவருக்குக் கற்பித்தார். தண்டுவால் கற்பிக்கப் பட்ட காரணத்தால் பரதக் கலை ‘தாண்டவம்’ என அழைக்கப் படுகிறது.

இறைவனின் தாண்டவங்கள்

சிற்ப ரத்னம், காசியப சிற்பம் ஆகிய நூல்கள், இறைவன் ஆடிய 9 தாண்டவங்களைப் பற்றிக் கூறுகின்றன.

திருப்புத்தூர் தலபுராணம் ஆனந்த தாண்டவம், சந்தியா தாண்டவம், உமா தாண்டவம், கௌரி தாண்டவம், காளிகா தாண்டவம், திரிபுர தாண்டவம் எனும் 7 வகைத் தாண்டவங்களைக் குறிப்பிடுகின்றது.

பரத சூடாமணி எனும் நூல் பஞ்சகிருத்திய (ஐந்தொழில்) தாண்டவங்களாக அகோர தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், ஆச்சர்ய தாண்டவம், ஆனந்த தாண்டவம், சௌந்தர்ய தாண்டவம் என 5 தாண்டவங்களைக் குறிக்கின்றது.
பரத சார சங்கிரகம் எனும் நூல் அற்புத தாண்டவம், அநவரத தாண்டவம், ஆனந்த தாண்டவம், பிரளய தாண்டவம், சங்கார தாண்டவம் எனும் 5 தாண்டவங்களைக் கூறுகின்றது.

சங்கார தாண்டவமும் கால்மாறி ஆடிய தாண்டவமும்

“சாதாரணமாக இறைவனின் தாண்டவக் கோலத்தில் உடுக்கை வலக்கையிலும், தீச்சுடர் இடக்கையிலும் இருக்கும். ஆனால் சங்கார தாண்டவத்தில் இதற்கு மாறாக வலக்கையில் தீச்சுடரும் இடக்கையில் உடுக்கையும் இருக்கும். சென்னை மியூசியத்தில் இவ்வமைப்பில் கால்மாறி ஆடும் தாண்டவ மூர்த்தி உள்ளார். இவர் சங்கார தாண்டவர் ஆவார்.

கால்மாறிய ஆடிய தாண்டவத்தில் வழக்கம் போல் வலக்கையில் உடுக்கையும் இடக்கையில் தீச்சுடரும் காணப்படும்” என்று ‘இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்’ நூலில் குறிப்பிடுகிறார் பேரறிஞர் மயிலை. சீனி. வேங்கடசாமி.

திருவாதிரை

27 நட்சத்திரங்களுள் திருவாதிரையும் திருவோணமும் மட்டுமே ‘திரு’ எனும் அடைமொழியுடன் திகழ்பவை. திருவாதிரைக்குரியவர் சிவபெருமான். இது அக்கினி போல சிவந்த நட்சத்திரமாகும். எனவே எரி போல் மேனிப் பிரானாகிய சிவபிரானுக்கு உரியது என்பது மிகவும் பொருத்தமானதே.


சங்க இலக்கியங்களில் திருவாதிரை

‘அரும்பெறல் ஆதிரையான் அணிபெற மலர்ந்த
பெருந்தண் சண்பகம் போல’
என கலித்தொகையும் (150:20-21), ‘ஆதிரை முதல்வன்’ எனப் பரிபாடலும் (8:6) இறைவனை ஆதிரைக்குரியவன் எனக் குறிப்பிடுகின்றன.

திருவாதிரை விழா

திருவாதிரை விழாவை அந்தணர் தொடங்கி வைத்ததை,


கனைக்கும் அதிர்குரல் கார்வானம் நீங்க
பனிப்படு பைதல் விதலைப் பருவத்து
ஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்து
மாயிருந் திங்கள் மறுநிரை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்க
(11:74-78)

எனப் பரிபாடல் குறிப்பிடுகின்றது. இப்பகுதிக்கு

‘பனி மிகுதலால் குளிரால் ந்டுங்குதலை உடைய முன்பனிப் பருவத்து ஞாயிறு தெறாத கடைமாரியை உடைய மார்கழி மாதத்துத் திங்கள் மறுவொடு நிறைந்த திருவாதிரை நாளின்கண் ஆகமங்களை உணர்ந்த பூசகர் திருவாதிரைக்குத் தெய்வமாகிய இறைவனுக்கு விழவைத் தொடங்க’ என்று பரிமேலழகர் உரை விளக்கம் தருகின்றார்.

‘உலகம் அனைத்தையும் படைத்துக் காத்து அழிக்கும் பேராற்றல் உடைய ஒப்பற்ற முதல்வனை ஆதிரை நாளுக்கு உரியவன் என்று இவ்வுலகத்தார் பேசுவது எவ்வளவு நகைப்புக்கிடமானது...!’ என்று வியக்கின்றார் முத்தொள்ளாயிரப் புலவர். அப்பாடல் இது:

மன்னிய நாள்மீன் மதிகனலி என்றிவற்றை
முன்னம் படைத்த முதல்வனைப் – பின்னரும்
ஆதிரையான் ஆதிரையான் என்றே அறையுமால்
ஊர்திரைநீர் வேலி உலகு.

இத்தகு பெருமையுடைய திருவாதிரையன்று தமிழகம் முழுவதும் கூத்த பிரானாகிய நடராஜப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகளும் அபிஷேகங்களும் வருடந்தோறும் நடைபெறுகின்றன.

திருவாதிரையும் பௌர்ணமியும் நிறைந்த நன்னாளில் அதிகாலையிலேயே நடராஜப் பெருமானுக்கு அபிஷேகங்கள் நடைபெறும். தொடர்ந்து மணிவாசகப் பெருமான் அருளிச் செய்த திருவெம்பாவை ஓதப்பெறும். பின்பு கோபூஜை, தொடர்ந்து மகாதீபாராதனை. இது வழக்கமாக எல்லா சிவாலயங்களிலும் நடைபெறுவது.

’ஆருத்ரா’ எனப் போற்றப் பெறும் திருவாதிரைக்குப் பத்து நாட்கள் முன்பு கொடியேறி , பத்து நாட்களும் திருவெம்பாவை மட்டுமே ஓதப்பட்டு திருவாதிரையன்று சிறப்பான அபிஷேகங்கள் கண்டருளிய நடராஜப் பெருமான் திருவீதியுலா எழுந்தருளி அடியவர்களுக்கு அருள் செய்வார்.

உருவமும் கருத்தும்

இறைவனைப் பல்வேறு வடிவங்களில் வழிபடும் வழக்கம் உலகம் முழுவதும் இருந்திருக்கிறது. சிறப்பாக இந்தியாவிலும் கிரேக்கத்திலும் அக்கலை பல்வேறு பரிமாணங்களைப் பெற்றிருக்கிறது. கிரேக்கச் சிற்பக் கலைக்கும் நமது கலைக்கும் அடிப்படையில் வேறுபாடு ஒன்று உள்ளது.


கிரேக்கச் சிற்பங்கள் உருவங்களை உள்ளது உள்ளபடியே நம் கண்ணுக்கு எவ்வாறு தோன்றுகிறதோ அப்படியே அமைக்கப்படுவன. எனவே கிரேக்கர்கள் தமது தெய்வங்களை சிற்பமாக வடித்த போது மனித உடலமைப்பு எவ்வளவு கச்சிதமாக பொருந்துமோ அவ்வளவு அழகையும் பொருத்தி அத்தெய்வ வடிவங்களை அமைத்தார்கள். ஜூலியஸ், வீனஸ் போன்ற தெய்வ உருவங்களில் நாம் மனித உடலமைப்பின் அழகினைக் காணலாம். அவற்றின் நோக்கம் உருவ அழகு மட்டுமே.

ஆனால் நமது இந்தியச் சிற்பங்கள் அப்படியல்ல; வடிவங்களின் மூலம் ஏதேனும் நுணுக்கமான கருத்தை /உணர்ச்சியைக் காட்டுவதாக அமைந்தவை ஆகும். நமது தெய்வங்களின் வடிவங்கள் நமக்கு வெறும் காட்சிப் பொருளாக மட்டுமல்லாமல் கருத்தையளிக்கும் ஊடகங்களாகவும் திகழ்கின்றன. இத்தகைய நோக்கில் இறைவனின் வடிவங்களை நமக்களித்த நம் முன்னோர்களை நாம் போற்றாமல் இருக்க முடியுமா?

இந்தக் கண்ணோட்டத்தில்தான் ஆனந்தக் கூத்தராகிய நடராஜப் பெருமானின் திருவுருவத்தை நாம் காண வேண்டும். திருவாதிரையன்று இந்த ஆனந்தத் தாண்டவ தரிசனத்தை நாம் தரிசித்தால் சகல செல்வங்களும் , நோயற்ற செல்வமும், முக்தியும் நமக்குக் கிடைக்கும் என ஆகமங்கள் தெளிவாகக் கூறுகின்றன. எப்படிக் கிடைக்கும்?

ஆனந்தக் கூத்தரின் திருவுருவத்தில் அமைந்துள்ள தத்துவங்களை புரிந்து கொண்டால் கிடைக்கும்.

திருக்கைகள்

கூத்த பிரானுக்குப் பொதுவாக நான்கு கைகளும், சிறப்பாக 8, 10, 16 கைகளும் இருக்கும். இக்கைகள் திசைகளைக் குறிக்கின்றன. எங்கும் பரந்து இருக்கின்ற ஆகாயம் இறைவனின் திருமேனி என சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே, கைகள் திசைகளைக் குறிப்பது பொருத்தமானதே.


உடுக்கை

கூத்தபிரான் வலது பின்கையில் உடுக்கை ஏந்தியுள்ளார். இது படைத்தலைக் (சிருஷ்டி) குறிக்கும்.


தீச்சுடர்

பெருமான் தமது இடது பின்கையில் தீச்சுடரை ஏந்தியுள்ளார். இது அழித்தலைக் (சம்ஹாரம்) குறிக்கும்.


அபயகரம்

இறைவனின் முன் வலது கை அபய முத்திரை உடையது. இது ‘பயப்படாதே’ என்பதைக் குறிக்கும். காத்தலைக் (ஸ்திதி) குறிக்கும் கை இது.


ஊன்றிய திருவடி

முயலகன் மீது ஊன்றிய திருவடி மறைத்தல் (திரோபவம்) தொழிலைக் குறிக்கும்.


தூக்கிய திருவடி


எல்லா உயிர்களுக்கும் இன்னருள் புரியும் அருளல் (அனுக்கிரகம்) தொழிலைக் குறிப்பதாகும். இத்திருவடியையே ‘குஞ்சிதபாதம்’ என்பர்.


முயலகன்

இறைவனின் ஊன்றிய திருவடியின் கீழ் இருப்பவன். ‘அபஸ்மாரன்’ என்பது மற்றொரு பெயர். கருநிறமும் விகாரமான தோற்றமும் உடையவன். இவன் கையில் பாம்பு ஒன்று இருக்கும். ஆணவத்தைக் குறிக்கும் அடையாளமே முயலகன்.


வீசிய கை (கஜ ஹஸ்தம்)

தூக்கிய திருவடியைச் சுட்டிக் காட்டும் இக்கை. இறைவனின் திருவடி அல்லாது உயிர்களுக்கு வேறு பற்று இல்லை என்பதை உண்ர்த்த தூக்கிய திருவடியைக் காட்டுகிறது.


சடைமுடி

இது ஞானத்தின் அடையாளமாகும்.


நிலா

சடையிலுள்ள பிறை இறைவனின் பேரறிவைக் குறிக்கும்.


கங்கை

பெருகி வந்த கங்கையை ஓர் மயிர்க்காலில் இறைவன் கட்டினான். இது அவனது அளவில்லாத ஆற்றலைக் குறிப்பதாகும்.


ஊமத்த மலர்

இறைவனின் விருப்பு வெறுப்பற்ற தன்மையைக் குறிக்கும்.


திருநீறு


பராசக்தியின் வடிவமாகும்.


திருநீலகண்டம்

இறைவனின் அருளாற்றலைக் குறிக்கும் .


முக்கண்

சூரியன், சந்திரன், தீ ஆகிய மூன்றுமே முக்கண்கள்.


பூணூல்

இது பிரணவ காயத்திரியைக் குறிக்கும்.


திருவாசி

இது ஓங்காரத்தைக் குறிக்கும். திருவாசியின் மீதிருக்கும் சுடர்கள் 51 அட்சரங்களைக் குறிக்கும்.


இப்படி தத்துவமே வடிவமாக விளங்கும் கூத்தபிரானை அத்தத்துவக் கருத்துக்களை அறிந்து நாம் வழிபட்டால் மக்கட்செல்வமும் ஞானச் செல்வமும் முக்தியும் நிச்சயமாகக் கிடைக்கும்.

இறைவன் 108 தாண்டவங்களை நிகழ்த்தியிருந்தாலும் எல்லாவற்றிற்கும் மூலகாரணமானது – ஐந்தொழில் இயற்றுவது – இந்த ஆனந்தத் தாண்டவமே. அதனால்தான் நம் முன்னோர்கள் எல்லாக் கோயில்களிலும் நாம் உணர்ந்து வழிபடுவதற்காக இத்திருவுருவத்தை வைத்தார்கள்.

எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி
எங்கும் சிதம்பரம் எங்கும் திருநடம்
எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்
தங்கிடும் சிவனருள் தன்விளை யாட்டதே

என்பது திருமந்திரம்.

ஐந்தொழில்

சிவபிரானின் ஆனந்தத் தாண்டவம் ஐந்து தொழில்களையும் இயற்றுவதைக் குறிப்பதாகும். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பன ஐந்து தொழில்களாகும். இந்த ஐந்து தொழில்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். முப்பொருள் என்பன கடவுள் (பதி), உயிர் (பசு), அழுக்கு (பாசம்) இவையாகும்.


கடவுள் (பதி)

எல்லாம் வல்ல கடவுள் ஒருவர் உண்டு. அவர் அன்புடையவர். தூய்மையானவ்ர். இன்பத்தை அளிப்பவர். தோற்றமும் முடிவும் இல்லாதவர். (பிறப்பு இறப்பு இல்லாதவர்). அவரை யாரும் படைக்கவில்லை. உயிர்களிடத்துள்ள அழுக்கை நீக்கி சுத்தப்படுத்தி இன்பநிலை அடையச் செய்கிறார். இதற்கு உயிர்களின் மீதுள்ள அவரது கருணையே காரணமாகும். இதனையே ஐந்தொழில்களாகச் செய்கிறார்.


உயிர் (பசு)

உயிர்கள் எண்ணில்லாதன; உயிர்களைக் கடவுள் படைக்கவில்லை; உயிர்களும் பிறப்பு இறப்பு இல்லாதவையே. இவை கடவுளைப் போல தூய்மையாக இல்லாமல் மாசு படிந்து உள்ளன.


அழுக்கு (பாசம்)

இவை ஆணவம், கர்மம், மாயை என மூன்றூ. இவை உயிர்களிடத்தில் படிந்து உயிர்களை மயக்குகின்றன. இவையும் தோற்றம் முடிவு இல்லாதவையே.


இறைவன் உயிர்கள் மீது வைத்த பெருங்கருணையினால் அவற்றின் மீதுள்ள அழுக்குகளைப் போக்க சில வேலைகளைச் செய்கின்றான். அவையே ஐந்து தொழில்களாகும்.

படைத்தல் (சிருஷ்டி)

படைத்தல் என்பது உயிர்களைப் படைத்தல் என்பதல்ல. உயிர்கள் அனாதியானவை. எனவே இறைவன் அவற்றுக்கான உடல்கள், புலன்கள், உலகங்கள் , வாழ்வதற்கு வேண்டிய பொருள்கள் இவற்றைப் படைக்கின்றான். இதை தனு, கரண, புவன, போகம் என்பர்.


காத்தல் (ஸ்திதி)

உயிர்கள் செய்யும் வினைகளுக்கு ஏற்ப இன்ப துன்பங்களை அவை அனுபவிக்கும்படி செய்து அவை அனுபவிக்கும் காலம் வரை தனு, கரண, புவன, போகங்களை நிலைநிறுத்துவதுதான் காத்தலாகும்.


அழித்தல் (சம்ஹாரம்)

உயிர்கள் வினைப் பயன்களை அனுபவித்து முடித்த பிறகு அவற்றிற்கு கொடுக்கப் பட்ட உடல், புலன், உலகம், போகம் இவற்றை அழித்துவிடுதல். இங்கு அழித்தல் என்பது இல்லாமல் செய்துவிடுவதல்ல. மாயை என்னும் பொருளிலிருந்து தனு கரண புவன போகங்களைப் படைக்கின்றான் இறைவன். படைத்தவற்றை மீண்டும் மாயையிலேயே ஒடுக்குதல்தான் அழித்தல் எனப்படும். மண்ணிலிருந்து பானை உருவாகிறது. உடைந்த பானை திரும்ப மண்ணாகிறது. அழித்தல் என்பதனை ‘சம்ஹாரம்’ என்பர் வடமொழியில்
. சம்நன்றாக; ஹாரம் ஒடுக்குதல்; நன்றாக ஒடுக்குதல் என்பது பொருள்.

மறைத்தல் (திரோபவம்)

மேலே கூறிய படைத்தல் காத்தல் அழித்தல் என்பது மாயையின் மீது நடப்பதாகும். அனுபவிக்கும் காலம் வரையிலும் உயிர்கள் கர்மத்தில் வெறுப்படையாமல் அதனை செய்வதில் மேன்மேலும் விருப்பம் கொள்ளும்படி செய்தலே மறைத்தல் எனப்படும். இது உயிரின் மீது நிகழ்வதாகும்.


அருளல் (அனுக்கிரகம்)


இங்ஙனம் திரும்பத் திரும்ப வினைகளைச் செய்து பல்வேறு பிறப்புகளைப் பெற்ற உயிர்கள் மாசு நீங்கி தூய்மையடையும். அந்த உயிர்களுக்கு இன்பமாகிய முக்தியை இறைவன் அளிக்கின்றான். இது அருளல் எனப்படும்.


இந்த 5 தொழில்களையும் இறைவனின் ஆனந்த நடனம் குறிக்கின்றது. இதனை,

தோற்றம் துடியதனில் தோயும் திதி அமைப்பில்
சாற்றிடும் அங்கியிலே சங்காரம் – ஊற்றமா
ஊன்று மலர்ப்பதத்தில் உற்ற திரோதம் முத்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடு.

என ‘உண்மை விளக்கம்’ நூல் கூறுகின்றது.

உடுக்கைபடைத்தல்; அபயகைகாத்தல்; தீச்சுடர்அழித்தல்; ஊன்றிய திருவடிமறைத்தல்; தூக்கிய திருவடிஅருளல்.

சுருக்கமாக இப்படி கூறலாம்......

படைத்தல் – உயிர்களிடம் உள்ள அறியாமையாகிய மலம்
நீக்குவதற்காக.

காத்தல் - உயிர்கள் செய்த வினைகளை அனுபவிப்பதற்காக.

அழித்தல் - மாயையினால் சுழன்று சுழன்று பிறவிகளில் சுற்றி
வரும் உயிர்கள் சற்று இளைப்பாறுவதற்காக.

மறைத்தல் – உயிர்கள் வினைப் பயன்களை அனுபவிக்கும்
காலம் வரை தனு கரண புவன போகங்களை
நிலை நிறுத்தி வைப்பதற்காக.

அருளல் - மலம் நீங்கிய ஆன்மாக்களுக்கு முக்தி
அளிப்பதற்காக.

இவ்வாறு ‘தத்துவப் பிரகாசம்’ எனும் நூல் கூறுகின்றது.

திருவெம்பாவையில் ஐந்தொழில்
மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை 20 திருப்பாடல்களும் திருவாதிரைத் திருவிழாவில் 10 நாட்களும் இறைவனின் திருமுன்பு காலையும் மாலையும் ஓதப் பெறும். இந்த 10 நாட்களில் பிற திருமுறைகள் ஓதப்பட மாட்டா. இச்சிறப்பு பற்றி திருவாதிரைத் திருவிழாவானது ‘திருவெம்பாவைத் திருவிழா’ எனவும் போற்றப் பெறும்.

திருவாதிரைத் தெய்வமாகிய ஆடல்வல்லானை திருவெம்பாவையின் 2. 12 ஆகிய இரு பாடல்களிலும் மணிவாசகர் குறித்தருளுகின்றார்.

இறைவன் இயற்றும் ஐந்தொழில்களில் மறைத்தலை 14 ஆம் பாடலில் ‘பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை’ என குறிக்கின்றார். அருளல் தொழிலை ஆங்காங்கே குறிப்பிடுகின்றார். ஆயின் 5 தொழில்களையும் திருவெம்பாவையின் இறுதிப் பாடலில் அருளிச் செய்கின்றார். அப்பாடல்:

போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரீகம்
போற்றியாம் உய்ய ஆட்கொண்டு அருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்
.

இறைவனே இவ்வுலத்தின் தொடக்கம் என்பதை முதலடியும், அவனே இவ்வுலகத்தின் முடிவு என்பதை 2 ஆம் அடியும் தெரிவிக்கின்றன.

3 ஆம் அடி படைத்தலையும், 4 ஆம் அடி காத்தலையும், 5 ஆம் அடி அழித்தலையும், 6 ஆம் அடி மறைத்தலையும், 7 ஆம் அடி அருளலையும் குறிக்கின்றன.

எப்படியெனில் 3 ஆம் அடியில் வரும் தோற்றம் – படைத்தலையும், 4 ஆம் அடியில் வரும் போகம் – காத்தலையும், 5 ஆம் அடியில் வரும் ஈறு – அழித்தலையும், 6 ஆம் அடியில் வரும் காணாத – மறைத்தலையும், 7 ஆம் அடியில் வரும் ஆட்கொண்டு அருளும் – அருளலையும் குறிக்கும் சொற்களாகும்.

மனிதப் பிறவியின் நோக்கம்
மும்மலம் கெட்டு ஒழிதலும் , ஆனந்தமே வடிவமான பரசிவத்தை தரிசனம் செய்தலும் அதன் பயனாய் விளையும் இன்பமான முத்தியை அனுபவித்தலுமே , உயிர்கள் பிறவி எடுத்ததன் நோக்கமாகும். இதனை உணர்த்துவதற்காகத்தான் இறைவன் வீசிய கரமும் , தூக்கிய திருவடியும் கொண்ட நடராஜத் திருக்கோலத்தில் திருவீதியுலா வருகின்றார். இதனை ‘உற்சவ விளக்கம்’ எனும் நூல் கூறுகின்றது. அப்பாடல்:

பாசம்போய் அழிவும் இன்பப் பரசிவ வரவும் உண்மை
நேசநல் உயிர்கள் பேறா நிலைமை யதாகக் காட்டி
வீசிய கரமும் முத்தி விளங்கிய பதமும் காட்டித்
தேசுலாம் திருவெ ழுச்சித் திருவுலாச் செய்யல் உற்றார்.


அழகிய கூத்தனின் பதம் பணிந்து அருள் பெறுவோம்.


( 2009 நெல்லை தினமலர் பக்திமலரில் வெளிவந்த கட்டுரை)



3 கருத்துகள்:

Translate