சனி, 11 ஏப்ரல், 2009

வளம் தரும் வசந்தமே வருக!

ழமை வாய்ந்த நம் பாரத கலாசாரத்தில் கொண்டாடப் படும் ஒவ்வொரு பண்டிகையுமே கால அடிப்படையிலும் தத்துவ அடிப்படையிலும் அமைந்துள்ளது.


உலகின் பழம்பெரும் பண்பாட்டைக் கொண்ட பாரதத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக பற்பல விழாக்கள் கொண்டாடப் பட்டு வருகின்றன. இவ்விழாக்கள் பெரும்பாலும் பருவ நிலையை ஒட்டியே அமைந்திருக்கின்றன.

சூரியனை மையமாக வைத்து பூமியின் சுழற்சியையும் பருவ மாறுபாடுகளையும் நம் முன்னோர் தெளிவாக கணக்கிட்டுள்ளனர். இந்த கணக்கீடுகள் எளிய மக்களுக்கும் புரிய வேண்டும், புரிந்து கொண்டு நடைமுறைப் படுத்த வேண்டும் என்பதற்காக புராணங்களில் கதைகளாகக் குறித்து வைத்தார்கள்.

வேத கால வானியல்

நம் முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பகல், இரவு, ச்ந்திரனின் கலைகளில் மாற்றம், அமாவாசை, பௌர்ணமி, நட்சத்திரக் கூட்டங்கள், சந்திர சூரிய கிரகணங்கள் போன்ற வானவியல் தொடர்பான நிகழ்ச்சிகளை ஆராய்ந்துள்ளனர்.

‘வேதாங்க ஜோதிடம்’ எழுதிய லாகதர் (கி.மு.1378), ‘ஆர்ய பட்டீயம்’ இயற்றிய ஆர்ய பட்டர் (கி.பி.476), பஞ்ச சித்தாந்தங்கள் எனப்படும் 5 முக்கிய வானநூல்கள் அளித்த வராகமிகிரர் (கி.பி.570) ‘ப்ரம்ம ஸ்புட சித்தாந்தம்’ எழுதிய ப்ரம்ம குப்தர் (கி.பி.728), ’கணித ஸார ஸங்க்ரஹம்’ இயற்றிய மஹாவீராசார்யார் (கி.பி.800), ’சித்தாந்த சிரோமணி’ தந்த பாஸ்கராசார்யார் (கி.பி.1114) , பரமேஸ்வரன் (கிபி.1340 – 1425),
மாதவன் (கி.பி.1444 – 1545) முதலிய பற்பலர் வானியல் துறையில் வித்தகர்களாக விளங்கியிருக்கின்றனர்.


மகாபாரதத்தில் கால வர்ணனை

மகாபாரதம் ஆதிபர்வம் 3 ஆம் அத்தியாயம் பௌஷ்ய பர்வத்தில் அயோத தௌம்யர் என்ற முனிவருடைய சீடர்களைப் பற்றி சில கதைகள் உள்ளன. அதில் உபமன்யு என்ற சீடனைப் பற்றிய கதையில் காலச் சக்கரத்தைப் பற்றி ஓர் அருமையான வர்ணனம் வருகிறது. இதிலிருந்து நம் முன்னோர்களின் வானியல் அறிவு தெள்ளிதாக விளங்குகிறது. அந்த வர்ணனை:

உபமன்யு அஸ்வினீ தேவர்களைப் பின்வருமாறு துதிக்கின்றான்:

”சூரியனுடைய தேஜஸினால் வெளுப்பும் கறுப்பும் ஆகிய பகலையும் இரவையும் நெய்கிற உங்களைத் துதிக்கிறேன்.......360 கறவைப் பசுக்கள் ஒரு கன்றை ஈன்று அதற்குப் பால் கொடுத்து வளர்க்கின்றன. ( 360 நாட்கள் ஒரு வருடம் என்பதைக் குறிக்கிறது ) அந்தப் பசுக்கள் பல கொட்டில்களும் ஒரு கறக்கிறவனும் உள்ளவையாகச் செய்யப்பட்டன. ( பல நாடுகள் கொட்டில்கள்; சூரியன் கறக்கிறவன்; ஒளி பால் ) அந்த அஸ்வினீ தேவர்கள் மேற்சொன்ன பசுக்களிடம் சிலாக்கியமான தர்மத்தைக் கறக்கின்றனர். 720 ஆரக் கால்கள் வட்டகைகளில் கோக்கப் பட்டு ஒரு குடத்தில் சேர்ந்திருக்கின்றன. ( 360 நாட்களில் சேர்ந்த இரவு பகல்கள் 720 ம் வருடம் என்கிற ஒரு நாபியைச் சேர்ந்த ஆரக் கால்கள் என்று சொல்லப் பட்டன.) அந்தச் சக்கரமானது சுற்றளவில்லாமலும் அழிவில்லாமலும் சுற்றுகின்றது. ( காலச் சக்கரத்திற்கு முடிவில்லை என்பது பொருள்)

”...மற்றொரு சக்கரம் 12 ஆரக்கால்களுடனும் 6 நாபிகளுடனும் ஒரே அச்சுடனும் அமிர்தத்திற்கு ஆதாரமாக நடக்கின்றது. (12 மாதங்களும் 6 பருவங்களும் ஒரு வருடமுமாகிய கால சக்கரமானது உயிர்களின் உணவுக்குக் காரணமாக நடக்கின்றது என்பது பொருள்) ” .

ராசி மண்டலம்

பூமியை மையமாகக் கொண்டே கிரகங்கள் சுற்றுகின்றன என்று நம்பி வந்தனர் மேலைநாட்டார். ஆனால் பாஸ்கராசார்யார் (கி.பி.1120),(வானில் திரிபவை) எந்த வட்டத்தில் சுற்றுகின்றதோ அதன் மையப்புள்ளி பூமியின் மையம் அல்ல என்று தம் நூலில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆகாய மண்டலத்தை 27 நட்சத்திரக் கூட்டமாகவும் அக்கூட்டத்தை 12 ராசி மண்டலங்களாகவும் நம் முன்னோர் பிரித்துள்ளனர் இதே கணக்கீடு பண்டைய கிரேக்கர்களாலும் பின்பற்றப் பட்டிருந்தது.

சூரியப் பிரவேசம்

பன்னிரண்டு ராசிகளிலும் சூரியன் பிரவேசிப்பதே 12 மாதங்களின் தொடக்கமாகும்.
மேஷ ராசிப் பிரவேசம் – சித்திரை மாதம்
ரிஷப ராசிப் பிரவேசம் – வைகாசி மாதம்
மிதுன ராசிப் பிரவேசம் – ஆனி மாதம்
கடக ராசிப் பிரவேசம் - ஆடி மாதம்
சிம்ம ராசிப் பிரவேசம் - ஆவணி மாதம்
கன்னி ராசிப் பிரவேசம் – புரட்டாசி மாதம்
துலா ராசிப் பிரவேசம் – ஐப்பசி மாதம்
விருச்சிக ராசிப் பிரவேசம் – கார்த்திகை மாதம்
தனுசு ராசிப் பிரவேசம் – மார்கழி மாதம்
மகர ராசிப் பிரவேசம் – தை மாதம்
கும்ப ராசிப் பிரவேசம் – மாசி மாதம்
மீன ராசிப் பிரவேசம் – பங்குனி மாதம்


என இவ்வாறாகக் கணக்கிடப் படுகிறது.

தமிழக வழக்கம்

சூரியனை அடிப்படையாகக் கொண்டு காலத்தைக் கணிப்பது சௌரமானம் எனப்படும். 12 ராசிகளிலும் சூரியன் தங்கியிருப்பதை ஒவ்வொரு மாதமாக கொள்ளுதல் இவ்வகையைச் சேர்ந்ததாகும். இன்று உலகம் முழுதும் இந்த முறையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

சந்திரனை அடிப்படையாகக் கொண்டு கணிப்பது சாந்திரமானம் எனப்படும். முதலில் உலகம் முழுதும் சாந்திர மான முறையே பின்பற்றப் பட்டது.

பண்டைத் தமிழர்களும் சாந்திரமான முறையையே பின்பற்றினர்.சாந்திரமானத்திலும் பௌர்ணமியை முடிவாகக் கொண்ட பூர்ணிமாந்தம், அமாவாசையை முடிவாகக் கொண்ட அமாந்தம் என இரு பிரிவு உள்ளது. பூர்ணிமாந்தத்தையே தமிழர்கள் கடைபிடித்தனர் என்பதற்கு அவர்கள் சங்க காலத்தில் கொண்டாடிய விழாக்களே சான்று பகர்கின்றன.

பௌர்ணமி எந்த நட்சத்திரத்துடன் கூடியிருக்கிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரையே அந்த மாதத்தின் பெயராக அமைத்தனர்.

சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவதால் அந்த மாதத்திற்கு சித்திரை எனப் பெயர் வைத்தனர் தமிழர்கள்.

முந்தைய கால கட்டங்களில் தமிழாண்டு தை முதல் மார்கழி ஈறாகவும் , ஆவணி முதல் ஆடி ஈறாகவும் இருவேறு நிலையில் கணிக்கப் பட்டு, வழக்கில் இருந்து வந்திருக்கிறது. பின்னர் வானியல் துறையில் ஏற்படும் சில சங்கடங்களைத் தவிர்ப்பதற்காக இன்றுள்ள மேஷத்திற்குச் சூரியன் வரும் நாள் முதல் மீனத்தைப் பிரியும் நாள் வரை ஓர் ஆண்டாகக் கணிக்கப் படுகிறது.

முன்பு சாந்திர மானத்தில் தமிழர்கள் கணக்கிட்டனர் என்பதற்கு ‘மாதம்’ என்ற பெயரே போதுமான சான்றாகும். மதி எனும் சொல்லிலிருந்து மாதம் வந்தது.

இவ்வாறே வட இந்தியர்களும் , ரோமர்களும் , கிரேக்கர்களும் கணித்து வந்துள்ளனர் என்பதற்கு ‘மாஸம்’ எனும் வடமொழியும் , மந்த் ( MONTH ) எனும் ஆங்கிலமும் சான்றாகும்.

பின்னர் அனைவரும் வானியல் கணக்கீட்டிற்காக சாந்திர மானத்திலிருந்து சௌர மானத்திற்கு மாற நேர்ந்த பிறகும் கூட மாதம் என்பதையே இன்று வரையிலும் பயன்படுத்தி வருகின்றனர்.


வருடப் பிறப்பு

சூரியன் 12 ராசிகளில் முதல் ராசியான மேஷத்தில் பிரவேசிக்கும் நாள்தான் சித்திரை மாதப் பிறப்பாகும். இதுவே நமக்கு தமிழ்ப் புது வருடப் பிறப்புமாகும்.

சூரியன் மேஷ ராசியில் இருக்கும் காலம் முழுதும் சித்திரை மாதமாகும். இப்படியே ஒவ்வொரு ராசியிலும் சூரியன் சஞ்சரித்து இறுதியில் மீன ராசியில் பிரவேசம் முடிக்கும் போது ஒரு வருடம் முடிவதாகக் கணக்கிடப் பட்டுள்ளது.

சித்திரையின் பழமை

‘திங்கள் பன்னிரண்டு என்பதும், அவற்றுள் தை, மாசி, பங்குனி, கார்த்திகை முதலிய மாதப் பெயர்களைச் சங்கப் பாடல்கள் குறிப்பதனாலும் ஓர் ஆண்டில் சித்திரைத் திங்கள் முதற்கொண்டு பங்குனி ஈறாக எண்ணும் தமிழ் ஆண்டின் மாதப் பெயர் வழக்கும் பழமையானவை என்பது போதரும்’ என்பார் பேரா.சண்முகம் பிள்ளை (சங்கத் தமிழரின் வழிபாடும் சடங்குகளும் – பக். 201 )

எனவே கடந்த 2000 ஆண்டுகளுக்கும் குறைவில்லாமல் சித்திரை முதலான மாதங்கள் வழக்கத்தில் இருந்து வருகின்றன என்பது தெளிவு.


சித்திரையின் சிறப்பு

இந்த மாதத்தில்தான் மல்லிகையும் முல்லையும் மலர்ந்து மணம் வீசுகின்றன. மாம்பழமும் இனிமையான பலாவும் கிடைப்பது இந்த மாதத்தில் தான்.

சங்க காலத்தில் இந்த மாதத்தில் தான் காமவேள் விழாவும் இந்திர விழாவும் கோலாகலமாய்க் கொண்டாடப் பட்டன. இந்த மாதத்தில் தான் வேப்ப மரம் பூக்கிறது. சங்க காலத்தில் வேப்பம்பூ பூக்கும் காலத்தை மணநாளுக்கு உரிய காலமாகக் கருதியிருக்கின்றனர் என்பது நற்றிணை 206 : 6 – 7 பாடல் வரிகளால் விளங்குகிறது.


சித்திரை வழிபாடு

சித்திரை வருடப் பிறப்பு தமிழர்களாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் கொண்டாட வேண்டிய திருநாளாகும்.

சித்திரை வருடப் பிறப்பு அன்று அதிகாலையில் எழுந்து நீராடி வீட்டில் தெய்வங்களின் திருவுருவப் படங்களுக்கு மலர் மாலைகள் அணிவிக்க வேண்டும். தெய்வங்களின் திருவுருவப் படங்களுக்கு முன்பு மனைப் பலகை அல்லது வாழை இலை இட்டு அதில் புதுப் பஞ்சாங்கம் வைக்க வேண்டும். பஞ்சாங்கத்திற்குப் பதில் விரோதி வருட காலண்டரை வைக்கலாம்.

மனைப் பலகைக்கு முன்னால் மற்றொரு வாழை இலையில் சித்திரை விஷூ அவல்,சர்க்கரைப் பொங்கல், பாயசம், வெண்பொங்கல், வடை மற்றும் மனதிற்குப் பிடித்த இனிப்பு வகைகள் முதலியவற்றைப் படைக்க வேண்டும். விளக்கு ஏற்றி அலங்காரம் செய்து தூப தீபம் காட்டி தேங்காய் உடைத்து உணவு வகைகளை நிவேதனம் செய்து வழிபட வேண்டும்.

வழிபாட்டின் போது சம்ஸ்கிருத சுலோகங்கள் , தேவாரம் , திவ்ய பிரபந்தம் , விநாயகர் அகவல் முதலிய தோத்திரங்கள் சொல்லி வழிபட வேண்டும்.

பின்பு பஞ்சாங்கத்தை எடுத்து , முதலில் கணபதியை வணங்கி ‘ சுப ஸ்ரீ விரோதி வருஷம் ‘ என்று சொல்லி பின்பு மாதத்தின் பெயரை “சித்திரை” என்று சொல்ல வேண்டும்.

திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் எனும் 5 அங்கங்கள் சேர்ந்ததுதான் பஞ்சாங்கம் ஆகும்.( பஞ்ச + அங்கம் ).
திதி – சந்திரனின் கலைகளைக் குறிக்கும்.
வாரம் – கிழமைகள் ஏழினைக் குறிக்கும்.
நட்சத்திரம் – காலை சூரிய உதயம் எந்த நட்சத்திரத்தில் ஏற்படுகின்றது என்பதைப் பஞ்சாங்கம் குறிக்கும்.
கரணம், யோகம் – இவை இரண்டும் குறிப்பிட்ட கால அளவுகளின் பெயர்களே. சாஸ்திரம் நன்கு அறிந்தவர்களே இவற்றைச் சரியாகக் கணக்கிட முடியும்.


“வாரத்தைச் சொல்வதால் ஆயுள் வளரும்; திதியைச் சொல்வதால் ஐஸ்வரியம் கிடைக்கும்; நட்சத்திரத்தை உச்சரிப்பதால் பாவங்கள் நீங்கும்; யோகத்தைக் கூறுவதால் நோய் குணமாகும்; கரணத்தைச் சொல்வதால் நினைத்த காரியம் நடக்கும்” என்று சாஸ்திரம் கூறுகிறது.

பிறகு எல்லா தெய்வங்களையும் வேண்டி “ இந்த விரோதி வருடம் எல்லா உயிர்களுக்கும் நன்மையைத் தர அருள் செய்க “ என பிரார்த்தித்து விபூதி அல்லது குங்குமம் ஆகியவற்றை பக்தியுடன் நெற்றியில் அணிந்து கற்பூர ஆரத்தி காட்டி வழிபாட்டினை முடிக்க வேண்டும்.

வீட்டில் வழிபாடு முடித்த பின்பு கோயில்களுக்குச் சென்று இறைவனை வழிபட வேண்டும். திருக்கோயிகளில் நடைபெறும் பஞ்சாங்க படனம் எனும் பூஜையிலும் கலந்து கொண்டு இறைவனைத் தரிசிக்க வேண்டும்.

வருடப் பிறப்பு விசேஷ உணவுகள்

தமிழ்ப் புத்தாண்டிற்கு சித்திரை விஷூ அவல் மற்றும் வேப்பம் பூ பச்சடி எனும் உணவு வகைகளைச் செய்து இறைவனுக்குப் படைத்து தாமும் உண்டு மகிழ்வர்.

சித்திரை விஷூ அவல்


தமிழ்ப் புத்தாண்டு அன்று அவல், வெல்லம், நெய் கலந்த இனிப்பு செய்வர். வருடம் முழுதும் சந்தோஷம் நிலவ வேண்டும் என்பதற்காக இந்த சித்திரை விஷூ அவலை இறைவனுக்குப் படைப்பர்.

வேப்பம்பூ பச்சடி

தமிழ்ப் புத்தாண்டு அன்று படைக்கப்படும் மற்றொரு விசேஷ உணவு வேப்பம்பூ பச்சடி ஆகும். இன்பமும் துன்பமும் கலந்த மேடு பள்ளங்கள் நிறைந்தது தான் நம் வாழ்க்கை . இந்த நிலையற்ற வாழ்க்கையில் இன்பத்தை மட்டுமே கருதி பிறருக்குத் துன்பம் இழைப்பது என்பது கூடாது என்பதையும், இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும் மனம் கலங்காமல் சமநிலையில் வாழப் பழக வேண்டும் என்பதையும் நாம் உணர்வதற்காகத் தான் வேப்பம் பூ பச்சடி செய்கின்றோம்.

கோயில்களில் தமிழ்ப் புத்தாண்டு

தமிழ்ப் புத்தாண்டான சித்திரை மாதப் பிறப்பன்று தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் காலை முதல் இரவு வரை விசேஷ பூஜைகள் நடத்தப் படுகின்றன. இறைவனுக்குரிய பூஜைகள் முடிந்த பிறகு பஞ்சாங்கப் படனம் எனும் பஞ்சாங்கம் வாசிப்பு நடைபெறும்.

பாபநாசத்தில்...

சிவபிரானுக்கும் பார்வதி தேவிக்கும் கைலாச மலையில் திருக்கல்யாணம் நடந்தது. உலகில் உள்ள அனைவரும் கைலாசத்திற்கு வந்ததால் பூமியின் வடகோடி தாழ்ந்து தென்கோடி உயர்ந்துவிட்டது. இறைவன் அகத்தியரை அழைத்து தெற்கே போகச் சொன்னார். இறைவன் ஆணையை மறுக்க இயலாத அகத்தியர் திருக்கல்யாணத்தைக் காண முடியவில்லையே என பிரார்த்தித்தார். இறைவன் பாபநாசத் திருத்தலத்தில் ( நெல்லை மாவட்டம் ) அக்காட்சியை காட்டுவதாக வரமளித்தார்.

அகத்தியர் தென்பாகம் வந்து பாபநாசம் திருத்தலத்தை அடைந்தார். இறைவனும் முன்பு வரமளித்த படியே அகத்தியருக்கு திருக்கல்யாண காட்சியளித்தார். அகத்தியரும் அக்காட்சியைத் தரிசித்து பேரானந்தமடைந்தார்.

இந்நிகழ்ச்சி நடந்தது சித்திரை விஷூ அன்று என பாபநாசத் தல புராணம் கூறுகிறது. இன்றும் நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் மிகப் பெரிய திருவிழாக்களில் பாபநாசம் சித்திரை விஷூ திருக்கல்யாணக் காட்சி முக்கியமானதாகத் திகழ்கிறது.


ஸ்ரீ ரங்கத்தில்....

சித்திரை விஷூ அன்று நம்பெருமாள் முன்பு திருக்கச்சி நம்பிகள் பரம்பரையினர் காசுகள் அடங்கிய பைகளைக் கொண்டு வந்து வழிபடுவர். பெருமாள் பன்னிரு ஆழ்வார்களுக்கும் புத்தாடை வழங்கும் விழாவும் இன்றுதான் நடைபெறும்.

வசந்த முல்லை போல, வரும் புத்தாண்டு நம் வாழ்வில் நல்ல பல வளங்களை அருளட்டும் என இறைவனை வேண்டி வழிபடுவோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate