சனி, 27 அக்டோபர், 2012

குப்பையின்றி கோவில்களை பராமரிப்பது எப்படி? வழிகாட்டுகிறது மணிமங்கலம் தர்மேசுவரர் கோவில்

தமிழக வரலாற்றில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளது தாம்பரம் அருகேயுள்ள
மணிமங்கலம் கிராமம்.

மணிமங்கலம் போன்ற பல கிராமங்களுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உண்டு. மணிமங்கலம் கிராமத்தில் உள்ள மூன்று கோவில்கள், வரலாற்றில் அந்த கிராமத்தின் இடத்தை தெளிவாகக் காட்டுகின்றன.

தன்மீச்சரம் என்ற தர்மேசுவரர் கோவில், ராஜகோபாலப் பெருமாள் கோவில், கைலாச நாதர் கோவில் இவை மூன்றும் தரிசிக்க வேண்டிய கோவில்கள்.
இவற்றில் கைலாச நாதர் கோவிலில் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

அந்தத் திருப்பணிகளும், கோவிலின் பழமை கெட்டு விடாமல் மிகக் கவனமாக நடக்கின்றன.



கைலாசநாதர் கோவிலின் திருப்பணிக் காட்சிகள்

ராஜகோபாலப் பெருமாள்  கோவில் சமீபத்தில் தான் கும்பாபிஷேகம் ஆகி புதுப் பொலிவுடன் திகழ்கிறது. வயல் நடுவில் தன்னந்தனியாக இருப்பதுதான் தன்மீச்சரம் என்ற  தர்மேசுவரர்  கோவில்.

பெயர்க்காரணம்

ரத்தினங்களை  விற்கும் வணிகள் வாழும் கிராமங்களுக்கு பல்லவ, சோழப் பேரரசுகள் காலத்தில், சூமணிக்கிராமம், மணி மங்கலம்' என பெயர்கள் வழங்கப்பட்டன.

சம்ஸ்கிருதத்தில் இக்கிராமங்கள், சூரத்னாக்ரகாரம்' என அழைக்கப்பட்டன. காலப்போக்கில் சூழல்கள் மாறினாலும் கடந்த, 1,300 ஆண்டுகளாக பெயர் மாறாத ஒரு சில இடங்களில் இந்த மணிமங்கலமும் ஒன்று.
இந்த கிராமத்தில் வணிகர்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்துள்ளனர்.

தன்மீச்சரம்

தன்மீச்சரம் என, சோழர் காலத்தில் அழைக்கப்பட்ட கோவில் மூலவர் தற்போதும் அதே பெயருடன் தர்மேசுவரர் என வணங்கப்படுகிறார்.
தன்மம், தர்மம் என்பன ஒரு பொருள் குறிக்கும் சொற்கள்.


தர்மேசுவரர் கோவில் நுழைவாயில் தோற்றங்கள்


 இக்கோவிலில், 10ம் நுாற்றாண்டு துவங்கி, மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் ராஜராஜன், மூன்றாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் போன்றோரின் கால கல்வெட்டுக்கள் வரை உள்ளன.





தர்மேசுவரர்  கோவிலில் உள்ள சில கல்வெட்டுக்கள்

கல்வெட்டுக்களில் மணிமங்கலத்து தன்மீச்சரம் உடையார் என, இறைவன் குறிக்கப்படுகிறார். பெரும்பாலான கல்வெட்டுக்கள் விளக்கு எரித்தல், பூஜை நிவந்தம் உள்ளிட்ட  கொடைகளை பதிவு செய்துள்ளன.

வித்தியாசமான கட்டுமானம்

வழக்கமாக எல்லா கோவில்களிலும் கிழக்குப் பக்கம் கோபுர வாசல, அதைத் தொடர்‌ந்து மகா மண்டபம்,  நந்தி மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என நேர் கோட்டில் இருக்கும்.

தர்மேசுவரர் கோவில் சற்று வித்தியாசமாகக் கட்டப்பட்டுள்ளது. இதன் பிரதான வாசல் கிழக்கு நோக்கியுள்ளது.

அதில் நுழைந்து உள்ளே சென்றால், முக மண்டபம் வருகிறது. இந்த முக மண்டபத்தில் ஏறி, இதன் வடபுறம் வழியாகத் தான் கோவிலின் மகா மண்டபத்தில் நுழைய முடியும்.

அதாவது, மூலவருக்கு நேராக வாசல் கிடையாது. பக்கவாட்டில் உள்ள மண்டப வாசல் வழியாகத் தான் உள்ளே  செல்ல முடியும்.

கருவறைக்கு நேர் எதிரில், மகா மண்டபத்தில் கல்லால் ஆன சாளரம் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் கட்டுமானம் குறித்த ஆகமக் குறிப்புகளில், இதுபோன்று சாளரம் அமைப்பது பற்றி குறிப்பிடப்படவில்லை என்றும், இந்த சாளர அமைப்பிற்கு என்ன காரணம் என்பதைக் கண்டறியு முடியவில்லை என்றும் ஆகம வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

கடற்கரையோரக் கோவில்கள் அனைத்திலும் இதுபோன்ற சாளர கட்டுமான முறை பின்பற்றப்பட்டிருப்பதைக் காணலாம்.

விமானம், கோஷ்டம்

விமானம், துாங்கானை மாடம் (கஜ பிருஷ்டம்) அமைப்பைச் சேர்ந்தது. கடைசியாக இந்த விமானம் புதுப்பிக்கப்பட்ட வடிவத்திலேயே தற்போதும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.


துாங்கானை மாட விமானம்

கோஷ்டங்களில், விநாயகர், தட்சிணாமூர்‌த்தி,  விஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகிய மூர்த்திகள் உள்ளனர்.

சுற்றுப் பிராகாரத்தில் கொன்றை மரத்தடியில் உள்ள இடம்புரி விநாயகர், சோழர் காலத்தைச் சேர்ந்தவர்.

நவகண்டம்

தர்மேசுவரர் கோவிலின் வாசல் அருகில், வீரர்கள் தங்கள் தலையை தாங்களே அரிந்து கொள்ளும் பலகைச் சிற்பங்கள் உள்ளன.

நவகண்ட சிற்பங்கள் 

அதில் ஒரு சிற்பத்தில் வீரனது மனைவியர் இருபுறமும் நிற்பது போல செதுக்கப்பட்டுள்ளது. இந்த வகை சிற்பங்கள், நவ கண்டம் என அழைக்கப்படுகின்றன.

போரில் தமது மன்னர் வெற்றி பெற  வேண்டும் என்றோ அல்லது வேறு ஏதாவது ஒரு  கோரிக்கைக்காகவோ, வீரர்கள் தங்கள் தலையை தாங்களே அரிந்துகொள்ளும் வழக்கம் பழங்காலம் தொட்டே தமிழகத்தில் இருந்துள்ளதை இந்த சிற்பங்கள் காட்டுகின்றன.

தொல்லியல் துறை பராமரிப்பு

வேதாம்பிகை கோவில், தனிக் கட்டுமானமாக, வெளியில் உள்ளது. அர்த்த மண்டபம், கருவறையுடன் கூடிய இந்த எளிமையான கோவிலின் கருவறையில் நான்கு கரங்களுடன் தெற்கு நோக்கி வேதாம்பிகை எழுந்தருளியிருக்கிறார்.

இறைவன் சன்னிதிக்கு நேர் எதிரில், நந்தி, பலிபீடம் அமைந்துள்ளது.
இக்கோவிலை, இந்தியத் தொல்லியல் துறை பாதுகாத்து வருகிறது. அதோடு வழக்கமான கால பூஜைகளும் நடந்து வருகின்றன.

பசுமை வெளியில் தர்மேசுவரர் கோவில் 


ஒரு கோவிலை எப்படிப் பாதுகாக்கலாம் என்பதை இந்தக் கோவிலின் பராமரிப்பில் இருந்து  அறிந்து கொள்ள முடிகிறது.

பிளாஸ்டிக், குப்பை, எண்ணெய் என வழக்கமான கோவில்களுக்கே  உரிய அடையாளங்கள் எதுவும் இல்லாமல் மிகத் துாய்மையாக இக்கோவில் காட்சியளிக்கிறது.

1 கருத்து:

Translate