திங்கள், 15 அக்டோபர், 2012

பார்த்தசாரதி ஏலப்பாட்டு

குஜிலி இலக்கியங்களில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளும், வேதவல்லித் தாயாரும் இடம் பெற்றுள்ளனர் என்பது, வரலாற்றாய்வாளர்களுக்கு ஆச்சரியமளிக்கும் தகவல்.

சென்னை கந்தக்கோட்டம் சுற்றியுள்ள பகுதி குஜிலி பஜார் என அழைக்கப்பட்டது.


இப்பகுதியில் குஜராத்தியர் பெருமளவில் வசித்து வந்ததால் அதன் அடிப்படையில் குச்சிலி, குஜிலி என்ற பெயர்கள் வழங்கப்பட்டதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

குஜிலி புத்தகங்கள்

சாதாரண மக்களை ஈர்க்கும் வகையில், அன்றாட நிகழ்வுகள் அல்லது முக்கிய சம்பவங்களை தொகுத்து சாதாரண தாளில், இன்றைய சினிமா பாட்டு புத்தகங்கள் போல குஜிலி புத்தகங்கள் வெளிவந்தன.

வழிநடைச் சிந்து, நொண்டிப் பாட்டு, ஏலப்பாட்டு, ஏசல் பாட்டு போன்ற பல பாடல் வடிவங்களில் இவை அமைந்திருந்தன.

பெருமாள் ஏலப்பாட்டு

அவற்றில் ஒன்றுதான் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் பலசரக்கு ஏலப்பாட்டு என்பது.




பல நாடுகளுக்கும் செல்லும் கப்பல்கள் துறைமுகம் வந்து சேர்வதையும், அவற்றில் இருந்து பல வகையான பொருட்கள இறக்குமதியானதையும் குறிப்பிடுவதுதான் ஏலப்பாட்டு.

பார்த்தசாரதி பெருமாள் மீது பாடப்பட்ட ஏலப்பாட்டு புத்தகம் 1876,1886,1900,1903 எனத்  தொடர்ந்து பல பதிப்புகளைக் கண்டிருக்கிறது. எனினும் ஒன்றில் கூட இதை இயற்றியவர் பற்றிய குறிப்பு இல்லை.

சுவாரசியம்

அந்த காலத்தில் எவ்வளவு வகையான அரிசிகள், பருப்பு வகைகள் இருந்தன என்பதையும், எந்தெந்த நாடுகளில் இருந்து இறக்குமதி அதிகளவில் நடந்தது என்பதையும், இந்த ஏலப்பாட்டு மூலம் அறிய முடிகிறது.

வேதவல்லி தாயார் கப்பல்

`ஏலேலோ குருபாதம்  அம்பாள் விநாயகனே முன்னடவாய்' எனத் துவங்கும் காப்புப் பாடல், `சீர் பொழியும் திருவல்லிக்கேணி எனும் புரிதனிலே  வாசமாக வீற்றிருக்கும்  பார்த்தசாரதியும் தேவியுடன் வேதவல்லித் தாயார்க்கு  கப்பல் காணிக்கைகள் வெகுவிதமாய்  பாரமுடன் சரக்கு கட்டி   ஓடிவரும் சம்மதிக்க' என முடிகிறது.



வேதவல்லித் தாயாருக்காக வந்த கப்பல் என்பதைக் குறிக்கும் வகையில்,`உத்தமியாள் வேதவல்லி பத்தினியாள் கப்பலிது' என ஆசிரியர் தெரிவிக்கிறார்.

அரிசி வகைகள்

அதில், பால்வடியும் சம்பா, சிறு ராசி நெல்லு, கொடி சம்பா, குங்குமச் சம்பா, கொத்து முத்துச் சம்பா,  குடமல்லிச் சம்பா, மல்லிகைச் சம்பா, பங்காள தேசத்தில் வால் நீண்ட  நெல்லு, அனுமந்த சம்பா, கடுகு சம்பா, மிளகு கற்பூர சம்பா, கன்னியரிசி, கருப்பு நெல்லரிசி, சடைச் சம்பா என நெல்லில் சம்பா வகை மட்டும் பட்டியல் இடப்படுகிறது.

அதேபோல், கறிமஞ்சள், பொடி மஞ்சள், காரமுள்ள மஞ்சள், கப்ப மஞ்சள், சாய மஞ்சள், பங்காள மஞ்சள் என மஞ்சள் வகைகளும் கூறப்படுகின்றன.

கேமரா, பிஸ்டல், பீரங்கி

இவை தவிர, மலையாள சஞ்சீவி, நல்ல நிலவேம்பு, விஷ முஷ்டி, செத்தவரைப் பிழைப்பிக்கும் சஞ்சீவி மருந்து, வெட்டுண்ட காயங்கள் ஒட்ட நல்ல மருந்து, குழந்தை இல்லாதோர்க்கு மருந்து எனப் பல மருந்து வகைகளும், பங்காள தேசத்து பர்க்களா துண்டு, ஐதராபாத்தில் தாட்டி பத்திரி சேலை, கண்ணாடி காம்பிராக்கள் (கேமரா), சீமைக் கடுதாசி (காகிதம்), இங்கி புட்டி (இங்க்  பாட்டில்), பேனாக்கள், பிஸ்தோல் துப்பாக்கிகள் (பிஸ்டல்), பீரங்கி குண்டு, கெடியார மாணிக்கம் போன்றவையும் அக்கப்பலில் வந்திறங்கியதாக ஏலப்பாட்டு கூறுகிறது.

அந்தக் காலத்தில் வங்கதேசத்தில் இருந்து பொருட்கள் இறக்குமதியானதை இந்த நுால் பதிவு செய்கிறது. வங்க தேசத்தை பங்காள தேசம் எனக் குறிப்பிடுகிறது.

சித்தர்கள் பாணியில்...

நுாலின் இடைப் பகுதியில், மனித உடலையே கப்பலாக வர்ணித்து ஒரு பாடல் இடம் பெறுகிறது.

அதில், `நமசிவாயம் கொண்டு நங்கூரம் பாய்ச்சி, நாலு வேதத்தால் பீரங்கி ஏற்றி, அஷ்டாட்சரத்திலே காற்றுகளும் பாய... கப்பல் வந்து சேர்ந்ததையா' என குறிப்பிடும் இடம் சித்தர்களின் குறியீட்டு மரபைப் பின்பற்றி அமைந்துள்ளது.

பிரிட்டிஷாருக்கு வாழ்த்து

`பேரான பேர் பெற்ற சென்னை புரியாளும்  பெரிய துரை சின்ன துரை எல்லாரும் கேட்டு  நாடாளும் இங்கிலீஷ் கொடிக்காரர்'  என நுாலின் துவக்கத்திலும், `சீவகாரணரான பார்த்தசாரதியும்  சீரான வேதவல்லித் தாயாரும் வாழி  மேலான சென்னை புரி ஆளுகின்ற துரைகள்  மென்மேலும் சுற்றாரும் வாழி மிக வாழி  சுப்ரீம் கோட்டில் உள்ள துரைகள் எல்லாம் வாழி' என இறுதியிலும் ஆங்கில ஆட்சியாளர்கள் புகழப்படுகின்றனர்.

ஐரோப்பிய உயர் அலுவலர்கள் துரை என்றும், கவர்னர் போன்றவர்கள் பெரிய துரை என்றும் அழைக்கப்பட்டனர் என, ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பார்த்தசாரதிப் பெருமாள் ஏலப்பாட்டு, இன்றும் படிப்பதற்கு மிக சுவாரசியமாக பல தகவல்களை உள்ளடக்கியுள்ளது.

1 கருத்து:

  1. இத்தனை எழுதியிருக்கீக...
    இந்தப் பாட்டுலேந்து ஒரு
    இருபது வரி எடுத்து
    இந்தாய்யா இது தான் அந்தப்பாட்டுன்னு போட்டிருக்கக்கூடாதோ !!
    ]

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு

Translate