புதன், 23 ஏப்ரல், 2014

உள்ளங்கவர் பெரியாழ்வார் – 2

தேவாரத்தில் ஒரு பாதாதிகேச வர்ணனை இருப்பதாக சொன்னனேன் அல்லவா?

தில்லைக்கு சென்ற அப்பரடிகள், கூத்தபிரானை கண்டு உள்ளமுருகி பாடியருளிய பண்ணமைந்த பதிகங்களுள் ஒன்று, ‘பாளையுடைக் கமுகு ஓங்கி’

அந்த பதிகத்தில், திருவடி முதல் திருமுடி வரை, ஆடல்வல்லானை காண்பித்திருப்பார் அப்பரடிகள்.
அதேபோல் தான் பெரியாழ்வார், சீதக்கடல் பாசுரத்தில், பாதாதிகேச வர்ணனை செய்கிறார். இங்கு வர்ணனைக்கு குழந்தை கண்ணன் அகப்பட்டு கொள்கிறான்.

தாலாட்டுக்கு மாணிக்கம் கட்டி பாசுரம் தான். இப்படி ஒரு பதிகம், சைவத்தில் அமையவில்லை தான். பின்னாட்களில், பிள்ளைத் தமிழ் பிரபந்தங்களில் அமைந்தாலும், அவை எல்லாம், சிவபிரானைத் தவிர்த்து மற்றைய தெய்வங்களுக்கு அமைந்தவை தான்.

அம்புலிப் பருவத்து, ‘தன்முகத்து’ பாசுரம், முழுவதுமே தித்திப்பு தான்.

அதில்,

என்சிறுக் குட்டன் எனக்கோர் இன்னமுது எம்பிரான்
தன்சிறுக் கைகளால் காட்டி காட்டி அழைக்கின்றான்

சக்கரக் கையன் தடங்கண்ணால் மலர விழித்து
ஒக்கலை மேலிருந்து உன்னையே சுட்டிக் காட்டுங்காண்

அழகிய வாயில் அமுத ஊறல் தௌிவுறா
மழலை முற்றாத இளஞ்சொல்லால் உன்னைக் கூவுகின்றான்

தண்டொடு சக்கரம் சார்ங்கம் ஏந்தும் தடக்கையன்
கண்துயில் கொள்ளக் கருதிக் கொட்டாவி கொள்கின்றான்

அடிகள் அற்புதம்.


உள்ளங்கவர் பெரியாழ்வார் - 1
உள்ளங்கவர் பெரியாழ்வார் - 3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate