சனி, 3 நவம்பர், 2012

தமிழர் அதிகாரப் பகிர்வில் பின்வாங்கும் இலங்கை: சர்வதேச நெருக்கடியால் சிக்கல்

(தினமலர் நாளிதழில் வெளியான நாள்: 13-02-2012)

இலங்கையில், தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு குறித்த பேச்சுவார்த்தைகள், தற்போது முடங்கியுள்ளன. 17 சுற்றுப் பேச்சுவார்த்தைகள், எவ்வித முடிவுக்கும் வராததை அடுத்து, அரசும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் (டி.என்.ஏ.,) பரஸ்பரம் குற்றம்சாட்டி, அறிக்கைகளை விடுத்து வருகின்றன.

இலங்கை இனப் பிரச்னைக்குத் தீர்வாக, 1987ல் உருவாக்கப்பட்ட இந்தியா  இலங்கை ஒப்பந்தத்தின்படி, 13வது சட்டத் திருத்தத்தை, தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில், இலங்கை அரசு அமல்படுத்த வேண்டும்.

 தற்போது, இத்திருத்தம் கிழக்கு மாகாணத்தில் அமலில் இருப்பதாகக் கூறப்படுகிறது. விரைவில், வடக்குப் பகுதியிலும் அமல்படுத்த வேண்டும் என, இந்தியா, இலங்கையை வலியுறுத்தி வருகிறது.

பார்லி., தேர்வுக் குழு:

இப்பிரச்னையைத் தீர்க்க, அரசு பார்லிமென்ட் தேர்வுக் குழு ஒன்றை நியமித்துள்ளது. மொத்தம், 31 உறுப்பினர்கள் கொண்ட அக்குழுவில், அரசு சார்பில், 19 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள உறுப்பினர்களை டி.என்.ஏ.,யும், பிற எதிர்க்கட்சிகளும் நியமிக்க வேண்டும்.

டி.என்.ஏ.,வுக்கு நெருக்கடி:

தமிழ் மக்கள் மத்தியில், செல்வாக்குடன் திகழும் டி.என்.ஏ.,யை தவிர்த்து விட்டு, இப்பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது என்பதை நன்குணர்ந்துள்ள இலங்கை அரசு, எப்படியாவது பார்லி., தேர்வுக் குழுவில், டி.என்.ஏ.,யை கொண்டு வந்து விட வேண்டும் என, பல்வேறு வழிகளில் முயல்கிறது. நெருக்கடியும் கொடுத்து வருகிறது. ஆனால், டி.என்.ஏ., அரசுக்கு உள்நோக்கம் இருப்பதாகக் குற்றம்சாட்டி, தேர்வுக் குழுவில் சேர மறுக்கிறது.

என்ன செய்கிறது இலங்கை அரசு?

பார்லி., தேர்வுக் குழுவில் பேசாவிட்டால், அதிகாரப் பகிர்வு பிரச்னைக்குத் தீர்வே காண முடியாது என்பதைப் போலவும், அரசு நடந்து கொள்கிறது. அன்னிய சக்திகளுக்குப் பலியாகிவிடாமல், தேச நலனைக் காக்க முன்வரும்படி, டி.என்.ஏ.,வுக்கு அறைகூவல் விடுக்கிறது.

உண்மையில், இலங்கை அரசு என்ன தான் செய்கிறது? பார்லி., தேர்வுக் குழு அவசியம் தானா? என்ற கேள்வி, இப்போது சர்வதேச அளவில் எழுந்துள்ளது.இலங்கை அரசு, ஒரு புறம் அதிகாரப் பகிர்வு பிரச்னையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வது போலக் காட்டிக் கொண்டாலும், மற்றொரு புறம், பிரச்னையை இழுத்தடிப்பதில் தான் குறியாக இருக்கிறது.

அதிபர் ராஜபக்ஷே, அவரது அரசில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகள் மற்றும் தமிழர் பிரதிநிதிகள் ஆகியோரது பேச்சுக்களும், நடவடிக்கைகளும் இதை உறுதிப்படுத்துகின்றன.

ராஜபக்ஷேவின் முரண்பாடுகள்:

கடந்த 4ம் தேதி, அனுராதபுரத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் பேசிய ராஜபக்ஷே, "இனப் பிரச்னைக்குத் தீர்வு காண, பார்லிமென்ட் தேர்வுக் குழு தான் மிகச் சிறந்தது. இறக்குமதி செய்யப்படும் தீர்வுகளை விட, வெளிநாட்டு அழுத்தங்களுக்காக செயல்படுவதை விட, தேர்வுக் குழுவில் கலந்து கொண்டு, நாட்டு மக்களின் விருப்பப்படி, பிரச்னையைத் தீர்த்துக் கொள்வது தான், அனைத்துக் கட்சிகளின் பொறுப்பு' என கூறியுள்ளார்.

தொடர்ந்து, 6ம் தேதி சாவகச்சேரியில் பேசிய அவர், "அரசியல் பிரச்னைகளைப் பொறுத்தவரை, டி.என்.ஏ., தீர்க்க முடியாத பிரச்னைகளைத் தான் முன் வைக்கிறது. இந்தப் பிரச்னைகள் தீர்ந்து போனால், அவர்களால் அரசியல் செய்ய முடியாது என்பதற்காகத் தான் இழுத்தடிக்கின்றனர்' என தெரிவித்துள்ளார்.

கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பு: 

இலங்கை மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களான சம்பிக ரணவக்க, விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்த்தன ஆகியோர், 13வது சட்டத் திருத்தத்தின்படியான போலீஸ், நிலம் அதிகாரப் பகிர்வை, கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

ஈ.பி.டி.பி.,யின் நிலைப்பாடு: 

கடந்த 7ம் தேதி, யாழ்ப்பாணம் நல்லூரில், சென்னைப் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த இலங்கை அமைச்சரும், ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, இதுகுறித்துக் கூறியதாவது:

டி.என்.ஏ.,வுக்கு பிரச்னையைப் பேசித் தீர்க்க விருப்பமில்லை. இப்பிரச்னையில், அக்கட்சி சரியான முடிவெடுக்குமானால், நான் போட்டி அரசியலை விட்டு விடுகிறேன். பார்லி., தேர்வுக் குழுவின் மூலம் தான், அதிகாரப் பகிர்வு பிரச்னையை பேசித் தீர்க்க முடியும்.

மேலும், நடந்து முடிந்த கதைகளைப் பேசிப் பேசிக் காலத்தை வீணடிக்காமல், அரசோடு இணைந்து, நலத் திட்டங்களை மக்களுக்குக் கொண்டு செல்வதே, தமிழ்த் தலைவர்களின் தலையாய கடமை. அதைத் தான் நான் செய்து வருகிறேன்.

இவ்வாறு டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

தேவானந்தா தமிழர் என்பதும், முன்னாள் ஈழப் போராளி என்பதும், இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வைப் பொறுத்தமட்டில், அதிபராகட்டும், அவரது கூட்டணிக் கட்சிகளாகட்டும், ஒரே பல்லவியைத் தான் பாடி வருகின்றனர்.

தேவானந்தா மட்டுமின்றி, அதிபரின் ஆதரவாளர்கள் அனைவரும், அவரது கருத்தையே வழிமொழிந்து வருவதே, இன்றைய இலங்கை அரசியலாக உள்ளது. மாற்றுக் கருத்தை முன்வைப்பவர்கள் அனைவரும், பிரிவினைவாதிகள் என, முத்திரை குத்தப்படுகின்றனர்.

13வது திருத்தம் என்னவானது?

போர் முடிந்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகியும், வடக்குப் பகுதியில், 13வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்தத் தயங்கி வரும் ராஜபக்ஷே, அதற்குப் பதிலாக, 13 பிளஸ் திட்டத்தை (13 சட்டத் திருத்தத்திற்கு அப்பால் என, இது விளக்கப்படுகிறது) அமல்படுத்தத் தயார் என, கூறி வருகிறார்.

இந்த 13 பிளஸ் திட்டத்தையும், அவரது கூட்டணிக் கட்சியான, "ஜாதிக ஹெல உறுமய' எதிர்க்கிறது.பார்லிமென்டில், மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை பலத்துடன் உள்ள ராஜபக்ஷே நினைத்தால், வடக்கில், 13வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்திட முடியும். ஆனால், அவர் அதில் முனைப்பு காட்டவில்லை.

13வது சட்டத் திருத்தத்தை, வடக்கு மாகாணத்தில் அமல்படுத்தினால், அந்த மாகாணத்திற்கென, தனி முதல்வர் மற்றும் போலீஸ், நில உரிமை அதிகாரம் கிடைத்து விடும். தற்போது, அங்கே அனைத்தும், மத்திய அரசின் பிடியில் உள்ளது.

பின்புலம்:

சாவகச்சேரியில் ராஜபக்ஷே பேசிய போது, செய்ய முடியாதவற்றை தமிழர் கட்சிகள் கேட்டு வருவதாகக் கூறினார். ஆனால், உண்மை வேறு விதமானது.

கடந்த 1985ல், இந்திய அரசின் முயற்சியில், பூடான் தலைநகர் திம்புவில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில், இலங்கையின் தமிழ் காங்கிரஸ் தவிர, அனைத்துக் கட்சிகளும் கலந்து கொண்டன.

இப்பேச்சுவார்த்தையில், தமிழர் அமைப்புகள் நான்கு கோரிக்கைகளை முன்வைத்தன.

* தமிழர் ஒரு தேசிய இனம்.
* வடக்கு, கிழக்கு மாகாணங்கள், தமிழர்களின் பூர்வீகத் தாயகம்.
* தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமை உண்டு.
* இலங்கையில் வாழும் அனைவருக்கும் குடியுரிமை உண்டு.

இந்த நான்கு கோரிக்கைகளில், கடைசியை மட்டும், அரசுத் தரப்பு ஏற்றுக் கொண்டது. தொடர்ந்து, 1987ல், இந்தியா  இலங்கை ஒப்பந்தத்தில், முதல் இரு கோரிக்கைகளையும், 2002 டிசம்பரில் நடந்த நார்வே பேச்சுவார்த்தையில், மூன்றாவது கோரிக்கையையும், இலங்கை அரசு ஏற்றுக் கொண்டது.

இந்த உறுதிமொழிகளை, தற்போது அமல்படுத்துவதில், இலங்கை அரசு பின்வாங்குகிறது என்பதைத் தான், அதிபரின் பேச்சுக்கள் குறிக்கின்றன.

சர்வதேச நெருக்கடி:

அதே நேரம், இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் தொடர் நெருக்கடி காரணமாக, தமிழர் பிரச்னையில், ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயத்திலும், இலங்கை அரசு உள்ளது.

அதனால், டி.என்.ஏ., பார்லி., குழுவில் பங்கேற்க வேண்டும் என, அரசு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது.இதற்கிடையில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில், இம்மாதம் 27, 28 தேதிகளில், நடக்க உள்ள மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், இலங்கை தனது போர்க் குற்ற ஆய்வுக் குழுவின் அறிக்கையைத் தாக்கல் செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்கா கண்டிப்பு:

அவ்வாறு தாக்கல் செய்யாவிட்டால், அந்த கூட்டத்தில், இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், சமீபத்தில், இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரீசுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

இதனால், ஜெனீவா கூட்டத்தில், தனக்கு எதிராக மற்ற நாடுகள் செயல்படாமல் தடுக்கும் வண்ணம், இலங்கையின் வெளியுறவு அமைச்சர் பெரீஸ், ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல உள்ளிட்ட சிலர், வெளிநாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இதற்கு இடையில், ஜெனீவா கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதாக, டி.என்.ஏ., அறிவித்துள்ளது.மொத்தத்தில், போர் முடிந்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகியும், தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு குறித்து, ஒரு இறுதியான தீர்வுக்கு வர விரும்பாமல், காலத்தை கடத்தவே இலங்கை அரசு விரும்புகிறது.

13வது சட்டத் திருத்தம் என்ன சொல்கிறது?

* சிங்களமும், தமிழும் அரசு மொழிகளாக அறிவிக்கப்பட்டு, ஆங்கிலம் இணைப்பு மொழியாகச் செயல்பட வேண்டும்.
* தமிழர்கள் அதிகம் வசிக்கும், வடக்கும், கிழக்கும் ஒன்றாக இணைக்கப்பட வேண்டும். இது, பொது ஓட்டெடுப்பு மூலம் நடத்தப்படலாம்.
* மாகாண சபைகள், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை, தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். முதல்வரின் தலைமையிலான அமைச்சரவை, மாகாணங்களை நிர்வகிக்க வேண்டும்.
* மத்திய அரசின் சார்பில், ஒவ்வொரு மாகாணத்திற்கும், அதிபர் ஒரு கவர்னரை நியமிக்கலாம். அவருக்கு சில அதிகாரங்கள் வழங்கப்படலாம்.
இந்த 13வது சட்டத் திருத்தத்தின் சில பிரிவுகள், தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக்குப் பாதகமாக உள்ளன. மாநிலங்களுக்கான அதிகாரங்களில், சர்ச்சை வரும் போது, அவற்றை மத்திய அரசு திரும்ப எடுத்துக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இதில் திருத்தம் செய்ய வேண்டும் என, டி.என்.ஏ., கோருகிறது.

13 பிளஸ் திட்டம் என்ன?

* 13வது சட்டத் திருத்தத்திற்கும் அப்பால், சில செயல் திட்டங்களை ராஜபக்ஷே முன்வைக்கிறார்.
* இலங்கை பார்லிமென்ட், தற்போது ஒரே ஒரு சபையுடன் செயல்பட்டு வருகிறது. அமெரிக்கா போல, செனட் என்ற மற்றொரு சபையை, 13 பிளஸ் திட்டம் மூலம் கொண்டுவர வேண்டும் என்கிறார் ராஜபக்ஷே.
* இந்த செனட் சபை, 1971, ஆகஸ்ட் 2ம் தேதி நீக்கப்பட்டது. தற்போது, மாகாண சட்டசபைகளுக்கு அறிவுறுத்தும் அமைப்பாக, இது செயல்படும் வகையில் கொண்டு வருவதற்கு, அரசு ஆலோசித்து வருகிறது.
* போலீஸ் அதிகாரத்தைப் பொறுத்தமட்டில், முழுமையான அதிகாரத்தை மாகாண சபைக்கு அளிக்காமல், குறிப்பிட்ட அதிகாரங்கள் மட்டும் அளிக்கப்படும்.

பல்டி அடித்த ராஜபக்ஷே:

கடந்த மாதம், மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கைக்குச் சென்றிருந்த போது, 13வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவதற்கு, அதிபர் ராஜபக்ஷே தயாராக இருப்பதாக, தம்மிடம் தெரிவித்ததாக, பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

அந்தச் சந்திப்பின் போது, கிருஷ்ணாவுடன் இருந்த இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரீஸ், அதுபற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.

ஆனால், கடந்த வாரம் பேட்டியளித்த ராஜபக்ஷே, 13வது சட்டத் திருத்தம் குறித்து, கிருஷ்ணாவுடன் தான் கலந்துரையாடியதாக மட்டுமே தெரிவித்ததோடு, அதுகுறித்து உறுதி எதுவும் அளிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்

.ராஜபக்ஷேவின் இந்த அந்தர் பல்டியில் இருந்து, அவர், தமிழர்களின் அதிகாரப் பகிர்வுக்கு, ஒரு போதும் தயாராக இல்லை என்பதையே, நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate